இராமேஸ்வரத்திற்கும், அதனின்று வட கிழக்காக மன்னார் குடாவில் உள்ள நெடுந் தீவிற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் தமிழ்நாட்டிற்கு உரித்தானதாக தொன்று தொட்டு இருந்துவந்த கச்சத் தீவை, 1974ஆம் ஆண்டு போடப்பட்ட ஒரு ஒப்பந்த்தின் வாயிலாக இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்துக் கொடுத்ததன் காரணமாகவும், அதன் பிறகு 1976ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தின் வாயிலாக கச்சத் தீவை ஒட்டியுள்ள கடற்பகுதியில் இரு நாடுகளும் எல்லை வரையறை செய்து கொண்ட காரணத்தினால் தமிழ்நாட்டின் மீனவர்கள் தொன்று தொட்டுப் பெற்றிருந்த மீன் பிடி உரிமை பறிபோனது. எனவே மீன் பிடி உரிமையை - அது வரலாற்று ரீதியாக தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமை என்பதால் - மீண்டும் நிலை நிறுத்த வேண்டுமெனில் இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு (அரசியல் கட்சிகள் மட்டுமே அல்ல) நேர்மையுடன் கோரி வருகிறது. தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை இதுவரை மறுத்தவர் யாருமில்லை. கச்சத் தீவுக் கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் அனுபவித்து வந்த மீன் பிடி உரிமை என்பது இன்றைக்கு அதனை தங்களுடைய சொத்துப் போல பாவித்துப் பரிமாறிக் கொண்ட இந்தியாவும் இலங்கையும் சுதந்திரம் பெற்ற நாடுகளாக பரிமளிப்பதற்கு முன்னரே இருந்த நீடித்த யதார்த்தமாகும். எனவே கச்சத் தீவை தாரை வார்த்ததன் மூலம் தமிழக மக்களின் வாழ்வுரிமையில் நமது நாட்டின் மத்திய அரசு அத்துமீறியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழக மீனவர்களைக் கலக்காமலேயே அவர்களின் மரபுரிமையை வேறொரு நாட்டிற்கு அளித்துள்ளது. இப்படி, ஒரு நாடு என்ற ரீதியில் மத்திய அரசிற்கு அப்படிப்பட்ட உரிமை உண்டென்று வாதிடுவோர் கூட, கச்சத் தீவை இழந்ததால் தமிழக மீனவர்கள் சந்தித்துவரும் அவலத்திற்கும், சிறிலங்க கடற்படையினரால் அவர்கள் கொல்லப்படுவதற்கும், துன்புறுத்தப்படுவதற்கும் அதுவே காரணமாகிறது என்பதையும் மறுக்கவில்லை. எனவே, நமது மீனவர்கள் முழு உரிமையுடன் தங்களுடைய பாரம்பரிய கடற்பரப்பில் பாதுகாப்புடன் மீன் பிடிக்க வேண்டுமெனில், கச்சத் தீவை மீட்டால் மட்டுமே அது சாத்தியமாகும். இதனை நன்கு உணர்ந்துதான் கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது. போதும் எதிரி அரசியல்! ஆனால், அதனை மீட்கும் பிரச்சனை எழுப்பப்படும் போதெல்லாம், அது தாரை வார்க்கப்பட்ட போது நீ என்ன செய்தாய் என்று தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளின் தலைவர்களான கருணாநிதியும், ஜெயலலிதாவும் அறிக்கை போரில் இறங்கி அரசியல் நடத்தி திசை திருப்புவதும் வழமையாகிவிட்டது. அதுதான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், கச்சத் தீவை மீட்பதற்கு அனைத்துக் கட்சிக்களும் ஆதரவு அளித்தால், அப்படிப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவேன் என்று கூறிய தமிழக முதலமைச்சர் கருணாநிதி, “பேராசை கொண்டு எல்லை மீறிச் சென்று மீன் பிடிப்பதால்தான்” பிரச்சனை ஏற்படுகிறது என்று கூறியுள்ளது வருத்தத்திலும் சிரிப்பை வரவழைக்கிறது.மீன்கள் அதிகம் இருக்கும் பகுதிக்குச் சென்றுதான் மீன் பிடிப்பார்கள், அதுதானே இயற்கை. இதில் பேராசைக்கு என்ன இருக்கிறது? கடலிற்குச் சென்று அளவோடு மீன் பிடிக்க வேண்டு்ம் என்ற முறை ஏதேனும் உண்டோ? தமிழரின் வாழ்வு குறித்த இலக்கியங்களைப் படித்துப் புத்தகங்களாக எழுதித் தள்ளிய முதலமைச்சர் ஏன் இப்படி பேசினார் என்பது புரியவில்லை.‘பேராசை பிடித்து எல்லையைத் தாண்டிச் சென்று’ என்று கூறுகிறாரே முதல்வர், அந்த எல்லை என்றைக்கு வந்தது? 1974இல் வந்தது. யாரைக்கேட்டுக் கொண்டு எல்லையை நிர்ணயித்தார்கள்? 1974இல் தாரை வார்த்தார்களே (தாரை வார்த்தார்கள் என்று கூறுவதைக் கூட மிகுந்த விசனத்தோடு தனது அறிக்கையில் விளக்கியுமுள்ளார் முதலமைச்சர்), யாரைக் கேட்டுக் கொண்டு செய்தது மத்திய அரசு? அதனால்தானே அந்த நடவடிக்கை தவறு என்று கூறி, ‘வருத்தம் தெரிவித்து’ தமிழக சட்டப் பேரவை தீர்மானம் நிறைவேற்றியது அன்றைய திமுக அரசு? எனவே கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்ததை எதிர்க்கும் முதலமைச்சர், அந்த ஒப்பந்த அடிப்படையில் இரு நாடுகளும் வரையறை செய்த எல்லைகளை தமிழக மீனவர்கள் மதித்து நடக்க வேண்டும் என்று கூறுகிறாரா? அப்படித்தானே மாநிலங்களவையில் தமிழக உறுப்பினர் மலைச்சாமி கேட்ட கேள்விக்கு பதிலளித்த அன்றைய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, “சர்வதேச எல்லையை மதித்து நடக்க மீனவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார். அதே குரலை தமிழக முதலமைச்சரும் ஒலிக்கிறாரே! |