ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட மனித உரிமை தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு, அந்நாடு தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது எப்படி? என்ற கேள்விக்கு விரிவாக விடையளித்துள்ளார் மக்கள் சமூக உரிமை கழகத்தின் தமிழகத் தலைவர் முனைவர் வி. சுரேஷ். உணவு பாதுகாப்பிற்கான உச்ச நீதிமன்றத்தின் ஆணையருக்கு ஆலோசகராகவும், மத்திய சட்டம், கொள்கை மற்றும் மனித உரிமை ஆய்வு அறக்கட்டளையின் உறுப்பினராகவும் உள்ளார். அவரோடு தமிழ்.வெப்துனியாவின் நேர்காணல்.தமிழ.வெப்துனியா.காம்: இலங்கையில் தற்போது நடந்து வரும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், நடந்து முடிந்த இறுதிப் போர் என்று சொல்லப்பட்ட மோதிலில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்று ஐநாவின் மனித உரிமை மன்றத்தின் தலைவர் நவநீதம் பிள்ளை ஐ.நா. மன்றத்திலேயே கூறினார். அவர் கூறியதன் அடிப்படையில் ஆழமான விவாதம் நடந்து இலங்கையில் நடந்த மனித உரிமை மற்றும் போர் மீறல்கள் என்ன என்பது பற்றி தெளிவாக விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த 26, 27ஆம் தேதிகளில் நடந்த அந்த கூட்டத்தில் அப்படி எதுவும் விவாதிக்கப்படாதது மட்டுமின்றி, சிறிலங்க அரசே கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எப்படி, எதனால் என்ற கேள்வியும், ஏன் அவ்வாறு நிகழ்ந்தது என்ற சந்தேகமும் பொதுவாக மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் உள்ளது. இதனை நீங்கள் விரிவாக விளக்க வேண்டும்.முனைவர் வி. சுரேஷ்: 26, 27ஆம் தேதி ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைக் கூட்டத்தில், உச்சக்கட்ட அரசியல் அதாவது ஆங்கிலத்தில் ஹைலெவல் பாலிடிக்ஸ் என்று சொல்வார்களே அதுதான் நடந்துள்ளது. பல ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். ஆனால் அந்த இறப்பே கண்துடைப்பாக மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு சில உண்மைகள் வெளிவருகின்றன. எப்படி ஒரு அரசாங்கம், தங்களுக்கு எதிரான தீவிரவாதத்தின் மீது போரை முன்னெடுத்துச் செல்கிறார்கள், அங்கு இருக்கக் கூடிய பிரச்சினைகளை போர் என்ற கண்ணோட்டத்திலும், தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி மறைப்பது எப்படி என்பதையும் செய்து காட்டினர்.வெறும் ஆயுதங்களை மட்டும் பயன்படுத்தாமல், போரில் சம்பந்தப்படாதவர்களையும் (அப்பாவி மக்களையும்) எப்படி ஒரு போர் வடிவத்தில் அவர்களையும் போருக்குள் கொண்டு வந்தார்கள், எவ்விதமான தந்திரத்தைக் கையாண்டார்கள் எனபதை இலங்கையில் நடந்த போரின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.இலங்கையில் தற்போது இருக்கக் கூடிய அரசாங்கம் மிகக் கொடூரமானது. நம்மை எல்லோரையும் விழுங்கிவிட்டார்கள். ஆள் பலம், படை பலம் இருக்கிறது. பிரச்சாரத்தின் மூலம் பல்வேறு சுலுகைகளையும் பெற்றார்கள். மனித உரிமை அமைப்பாளர்களை வெளியேற்றுதல் போன்றவற்றை ஒவ்வொன்றாகச் செய்தார்கள். ஜெனிவாவில் நடந்த விஷயங்களை இந்த பின்னணியில்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு அரசாங்கம், தன்னைப் பற்றியே பாராட்டிக் கொண்டு வந்த தீர்மானத்தை சாதாரணமாக யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தன்னைப் பற்றி தானே புகழ்ந்து கொள்வதை யார்தான் ஏற்றுக் கொள்வார்கள்? ஆனால், அப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து, தான் மட்டுமல்லாமல், 25 நாடுகள் இதனை முன்மொழிந்து தீர்மானத்திற்கு ஆதரவு பெற்றுள்ளனர் என்றால், யார் யாரை முட்டாளாக்கிவிட்டார்கள் என்று புரியவில்லை.அங்கு நடந்த மாபெரும் மனிதப் பேரழிவைப் பற்றி கூறியது உண்மையா அல்லது அங்கு ஒன்றுமே நடக்கவில்லை, ஒருவர் கூடக் கொல்லப்படவில்லை, மிக அழகாக போரை நடத்தினோம் என்று கூறுவது உண்மையா என்று புரியவில்லை.சில நேரத்தில் நமக்கே குழப்பமாகிவிடுகிறது. அந்த அளவிற்கு தந்திரமாகவும், சிறப்பாகவும் ஒரு செயலை அவர்கள் செய்து முடித்துள்ளனர்.இதைத்தான் நாம் அவசியமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் சிறிலங்க அரசு மேற்கொண்டது போன்ற ஒரு போர் நடவடிக்கையை, ஆசியாவில் இருக்கும் நாடுகளும், அவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளுக்கும் இதே வழியில் பின்பற்றினால் ஒரு பயங்கரமான நிலை ஏற்படும்.இது போன்றதொரு நிலைமை பாகிஸ்தானிலும் நிலவுகிறது. பாகிஸ்தானில் பலுச்சி மக்கள் வாழும் பகுதியில், நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல பலுச்சி மக்கள், நாங்கள் தனியே போக வேண்டும் என்று கோரி வருகின்றனர். |