பத்திரிக்கையாளர்கள் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் சர்வ சாதாரணமாக நிகழும் இலங்கைதான் உலகிலேயே பத்திரிக்கையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடாக உள்ளது என்று சர்வதேச கருத்துரிமைச் சுதந்திரச் சமூகம் கண்டனம் செய்துள்ளது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் கூடிய சர்வதேச கருத்துரிமைச் சுதந்திரச் சமூகம் (International Freedom of Expression Community - IFEX) அமைப்பு, இலங்கையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் போடால ஜெயந்தா தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. பன்னாட்டு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட 30 கருத்துச் சுதந்திர அமைப்புகளின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டு “பத்திரிக்கையாளர்கள் மீதான போரை நிறுத்து” என்று தலைப்பிட்டு அனுப்பியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:“சுதந்திரமாக செயல்பட்டு செய்திகளை அளித்துவரும் பத்திரிக்கையாளர்களை விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி, சிறிலங்க அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அறிக்கை விட்டு நேரடியாக மிரட்டி வருவதைக் கண்டு பத்திரிக்கைச் சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும் காப்பாற்றுவதற்கான சர்வதேச சமூகமும் கவலை கொள்கிறது.உங்களுடைய அரசின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பிரச்சாரம் செய்து வருவதாக சில நாட்களுக்கு முன் உங்கள் அரசாங்க அதிகாரிகளால் குற்றம் சாற்றப்பட்ட மூத்த பத்திரிக்கையாளரும், பத்திரிக்கைச் சங்க நிர்வாகியுமான போடால ஜெயந்தா, ஜூன் 1ஆம் தேதி கடத்தப்பட்டு காட்டு மிராண்டித்தனமாக தாக்கப்பட்டதை சர்வதேச பத்திரிக்கைக் கூட்டமைப்பும் (IFJ), மற்ற சர்வதேச கருத்துச் சுதந்திர அமைப்புகளும் உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.இரும்புக் கம்பிகள், கட்டைகளையும் கொண்டு ஆறு பேர் ஜெயந்தாவை கடுமையாக தாக்கியுள்ளனர். அவரை இனி பத்திரிக்கையாளராக செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவருடைய கையை அடித்து நொருக்கியுள்ளனர்.பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு, அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்ட வேண்டாம் என்று உங்களது அரசு அலுவலர்களை தடுத்து நிறுத்துமாறு சிறிலங்க அரசின் அதிபராக உள்ள தங்களை மிகுந்த மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறோம்.மக்களின் சமூக, அரசியல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மதிப்போம், பாதுகாப்போம் என்று உறுதி கூறும் சர்வதேச உடன்படிக்கையில் (International Covenant on Civil and Political Rights - ICCPR) கையெழுத்திட்ட நாடுகளில் ஒன்று என்ற அடிப்படையில் பத்திரிக்கையாளர்கள் உட்பட அனைவருடைய கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை காப்பாற்றும் கடமையை நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.பத்திரிக்கையாளர்களை சமூகத்தின் ஒரு அங்கமாகக் கொண்டு காப்பாற்ற வேண்டும் என்பதை உறுதி செய்யும் 1949ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி கையெழுத்தான ஜெனிவா உடன்படிக்கையும், 1977ஆம் ஆண்டு சேர்க்கப்பட்ட உள்நாட்டு ஆயுத மோதலில் பாதிக்கப்பட்டோரை பாதுகாக்கும் கூடுதல் நெறிமுறை விதிகளையும் (Additional Protocol on the Protection of Victims of Non-International Armed Conflicts (Protocol II)) ஆகியன சிறிலங்காவை கட்டுப்படுத்துகின்றன. “அப்பாவி மக்கள், தனி நபர்கள் ஆகிய எவராயிருப்பினும் அவர்கள் தாக்குதல் இலக்குளாக்கப்படக்கூடாது. மக்களை அச்சுறுத்தக்கூடிய, அவர்களிடையே அச்சத்தை பரப்பம் முதன்மை நோக்கம் கொண்ட நடவடிக்கைகள் ஆகியன தடுக்கப்படவேண்டும்” என்று அந்த உடன்படிக்கையின் கூடுதல் விதிமுறை 13 கூறுகிறது.“பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், அப்பாவி மக்கள் ஆகியோரை போரில் சம்மந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் சர்வதேச அளவில் ஒப்புக் கொண்ட கடமை என்பதன் அடிப்படையில் பாதுகாக்க வேண்டிவர்கள்” என்று வலியுறுத்தி ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையில் 2006ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 1738ஐ சிறிலங்க அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.இன்றைக்கு பத்திரிக்கையாளர்களுக்கு மிகவும் அபாயகரமான இடமான இலங்கை உள்ளது. உங்களுடைய அரசில் பத்திரிக்கையாளர்கள் கடத்தப்படுவதும், கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் மிகச் சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு காரணமானவர்கள் என்று இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படவுமில்லை.1) ஜனவரி 8ஆம் தேதி கொழும்புவில் பட்டப்பகலில் சண்டே லீடர் ஆசிரியர் லசந்தா விக்கிரமதுங்கா படுகொலை செய்யப்பட்டார். |