ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அம்மாநில மக்களின் ஜனநாயக உணர்வுகளைப் பிரதிபலித்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அது மதவாத ரீதியாக அம்மாநில அரசியல் பெரும் அளவிற்கு பிளவுபட்டுள்ளதையே காட்டுகிறது.ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 61 விழுக்காடு மக்கள் பங்கேற்றது, அவர்கள் இந்தியாவின் ஜனநாயகத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுவதாக உள்ளது என்று பொதுவாக வர்ணிக்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியபோது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது முக்கியமல்ல, அங்கு ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்பதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார். தேர்தலை புறக்கணிக்கும்படி, ஹூரியாத் உள்ளிட்ட மதவாத- பிரிவினைவாத இயக்கங்களும், ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளும் ‘வேண்டுகோள்’ விடுத்த நிலையிலும் 61 விழுக்காடு மக்கள் தேர்தலில் பங்கேற்றுள்ளது ஜனநாயக வழிமுறைகளின் மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று எடுத்துக்கொண்டாலும், அந்த வழிமுறையில் அவர்கள் வாக்களித்த விதம் ஜனநாயக உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. மாறாக, ஓராண்டிற்கு முன்னர் அம்மாநிலத்தை உலுக்கிய அமர்நாத் பிரச்சனையின் பிரதிபலிப்பாகவே தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளது என்பதுதான் உண்மை. தேர்தல் முடிவுகளை சற்றே கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை நன்கு புலப்படுகிறது.ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 87 இடங்களில் எந்த ஒரு கட்சியும் தனித்த பெரும்பான்மை பெறவில்லை என்றாலும், தேசிய மாநாட்டுக் கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்று அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சியாக உள்ளது. முன்னாள் முதலமைச்சர் முஃப்தி மொஹம்மது சையதுவின் மக்கள் ஜனநாயகக் கட்சி 21 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்திலும், 17 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திலும், கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் 10 இடங்களில் அதிகமாக வெற்றி பெற்று 11 இடங்களை பெற்று 4 வது பெரிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உயர்ந்துள்ளது.இதில் அதிகமான இடங்களைக் கைப்பற்றிய முதல் இரண்டு கட்சிகளான தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் தங்கள் வெற்றியில் பெரும்பான்மையான இடங்களை காஷ்மீர் பள்ளத்தாக்கிலேயே வென்றுள்ளன. ஜம்மு பகுதியில் இவ்விரு கட்சிகளும் சில இடங்களிலேயே வென்றுள்ளன. அதே நேரத்தில் இவ்விரு கட்சிகளுக்கும் கடந்த தேர்தலோடு ஒப்புடுகையில் இழப்பு ஏதுமில்லை. மாறாக, மக்கள் ஜனநாயகக் கட்சி 5 இடங்களைக் கூடுதலாகப் பெற்றுள்ளது! மூன்றாவது பெரிய கட்சியான காங்கிரஸ் கட்சி, கடந்த தேர்தலில் வென்ற இடங்களைக் காட்டிலும் 3 இடங்கள் குறைவாகப் பெற்றுள்ளது. குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில், அதிலும் குறிப்பாக தெற்கு காஷ்மீரில் அதன் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளது. தெற்கு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல வடக்கு காஷ்மீரில் ஃபரூக், உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. |