ஆனால் தமிழக அரசிற்கு அப்படி எச்சரிக்கை என்று எதையும் வீரப்ப மொய்லி பேசவில்லை என்று மறுத்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால், அதற்கு ஆதரவாக செயல்படுவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது என்று கூறினார்.காங்கிரஸ் ‘மேலிடம்’ கொடுத்த அழுத்தமே தமிழக முதல்வரின் இந்த கேள்வி பதில் எச்சரிக்கையாகும். தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க.விற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பா.ம.க., இரண்டு கம்யூனி்ஸ்ட்டுகள் ஆகியவற்றின் ஆதரவும் இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன்தான் ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற நிலையில், தனது அரசை காப்பாற்றிக் கொள்ளவே, அக்கட்சியினர் விடுக்கும் ‘கைது கோரிக்கைகளை’ அவசர அரசு நடவடிக்கைபோல தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது.எனவே தி.மு.க. அரசின் உயிர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை நம்பியே இருப்பதால் அவர்கள் சொல்வதையெல்லாம் (ஆட்சியில் பங்கு தருவது தவிர) தமிழக முதல்வர் செய்து வருகிறார் என்பது அரசியல் அறிந்தவர்களுக்குப் புரியாதது அல்ல.ஆனால், “இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பதுதான் தி.மு.க.வின் குறிக்கோள்” என்று கூறும் தமிழக முதலமைச்சர், அதே குறிக்கோளை எட்டவே அங்கு ஒரு விடுதலைப் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பதை மறுக்க முடியுமா? தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது ஒரு சட்ட ரீதியான நிலை. அந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு உதவக் கூடாது என்பது சட்ட ரீதியாக ஒவ்வொரு இந்தியன் மீதும் விதிக்கப்பட்டுள்ள தடை. அது சரியா தவறா என்பது விவாதத்திற்குரியது என்று தமிழக முதல்வரே சட்டப்பேரவையில் பேசியுள்ளார். அதுமட்டுமல்ல, இன்றைக்கு நடைபெறப்போகும் தமிழீழ ஆதரவு மாநாட்டைப் போல 2007ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் பேசியதை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியினர் பேசியபோது, அவர்களுக்கு பதிலளித்த தமிழக முதல்வர், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவதே அந்த இயக்கத்திற்கு உதவுவதாக ஆகாது என்று பொடா சட்டத்தின் கீழ் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதை தமிழக சட்டப் பேரவையிலேயே சுட்டிக்காட்டியுள்ளார்.அன்றைக்கு அவர் சரியாகப் பேசியதற்குக் காரணம், காங்கிரஸை தவிர்த்தாலும், பா.ம.க., இரண்டு கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவு தி.மு.க. அரசிற்கு இருந்தது. ஆனால் இன்று அந்த நிலையில்லை. எனவே முதல்வரின் இன்றைய நிலைக்குக் காரணம், அவரது ஆட்சியின் நிலையற்ற நிலையே தவிர, சட்ட நிலையிலோ அல்லது கருத்துச் சுதந்திரம் தொடர்பாக அவருக்கு திடீரென்று குழப்பம் ஏற்பட்டுள்ளதாலோ அல்ல என்பது தெளிவு.மத்திய, மாநில அரசுகளின் நிலை காலத்தி்ற்கு காலம் மாறுபடலாம், அது அரசியல் ரீதியான, சட்ட ரீதியான நிலைபாட்டை பொறுத்தது. இன்றைக்கு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கம் அப்படியேதான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கூட ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் தடை செய்யப்பட்டன. பிறகு விலக்கிக் கொள்ளப்படவில்லையா. அது வேறு.ஆனால், இலங்கைத் தமிழர்களின் துயரம் உடனடியாக தீர்க்கப்படவேண்டும் என்பதற்காகவே தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தாலும், நிரந்தரத் தீர்வையும் நோக்கி பேச வேண்டிய, விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில், அக்டோபர் 6ஆம் தேதி மயிலை மாங்கொல்லை பொதுக் கூட்டத்தில் முதல்வர் பேசியதுபோல, அது மத்திய அரசை மனிதாபிமான அடிப்படையில் செயல்படவேண்டும் என்று நாம் கேட்டுக் கொண்டாலும், நமக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அவர்கள் என்று நிம்மதியாக வாழ்வார்களோ அன்றுதான் நாமும் நிம்மதியாக இருக்க முடியும் என்பதே. |