“இலங்கைத் தமிழர் பாதுகாப்புத்தான் தி.மு.க.வின் குறிக்கோள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்போரைத் தி.மு.க. ஆதரிக்கவில்லை. அவ்வாறு ஆதரித்துப் பேசினாலும், செயல்பட்டாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட மாநில அரசு தயங்காது. இந்த எச்சரிக்கை எல்லோருக்கும் பொருந்தும்” என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறவுள்ள ‘தமிழீழ அங்கீகார மாநாட்டை’ கருத்தில் கொண்டுதான் கேள்வி-பதிலாக தமிழக முதல்வர் ஒரு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்பட்டாலும், இதற்கு ஒரு பின்னனி உள்ளதை மறுப்பதற்கில்லை.சமீப காலங்களில் இலங்கைத் தமிழர்கள் மீது சிறிலங்க இராணுவம் தொடுத்துவரும் தாக்குதலால் அவர்கள் பட்டுவரும் துயரத்தையும், ஈழ விடுதலையில்தான் அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படும் என்றும் பேசும் தலைவர்கள், தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று குரல் கொடுக்கையில், சிறிலங்க இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா மறைமுகமாக உதவி செய்து வருகிறது என்றும், அப்படிபட்ட உதவி தமிழர்களுக்கு எதிரான சிறிலங்க அரசின் நடவடிக்கைக்கு வலு சேர்க்கிறது என்றும் கண்டித்துப் பேசி வருகின்றனர். இப்படிப்பட்ட பேச்சிற்கிடையே, ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் தலையீட்டையும், அதன் காரணமாக ஈழ மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும், விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் நியாயப்படுத்திப் பேசுவது இயல்பானதாகிவிடுகிறது. அப்படிப்பட்ட பேச்சுக்களை கண்டிக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், அதனை தங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை கொன்ற இயக்கத்திற்கு ஆதரவான பேச்சு என்று கூறி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது தேசத் துரோகம் என்றும், அவவாறு பேசியவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, அக்கட்சியின் அவைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு இவர்கள் அனைவரும் பிணையில் விடுதலையானார்கள். ஒரு வாரத்திற்கு முன்னர், ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் தேசிய பொதுவுடமை கட்சியின் தலைவர் மணியரசன் ஆகியோரும் இதே காரணத்திற்காக, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வலியுறுத்தியதன் அடிப்படையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பெரியார் தி.க.வினர் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யச் சென்றபோது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த, அவர்கள் காங்கிரஸ் தலைவர்களின் உருவ பொம்மைகளைக் கொளுத்த, அங்கு வந்த காங்கிரஸார் அதனைக் கண்டிக்க சென்னை இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே பெரும் பதற்றமேற்பட்டது.இதே நேரத்தில் சத்தியமூர்த்தி பவன் எதிரே காங்கிரஸாருக்கும், விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட, அதனைக் கண்டித்து அண்ணா சாலையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட, அது தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்தது. காங்கிரஸாரும் ஆங்காங்கு மற்ற தலைவர்களின் கொடும்பாவிகளைக் கொளுத்தினர். அவர்கள் யாவரும் கைது செய்யப்பட்டு உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.இந்தப் பின்னனியில்தான், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு, ‘காங்கிரஸின் தயவில்தான் தமிழக அரசு உள்ளது’ என்பதை நேரடியாக சுட்டிக்காட்டி ஒரு அறிக்கை விடுத்தவர், விடுதலை சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தமாகவே வலியுறுத்தினார்.இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் வீரப்ப மொய்லி, காங்கிரஸ் தலைவர்களை இகழ்ந்து பேசுவோர் மீதும், தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவார் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தமாகக் கூறினார். இதனை ஒரு எச்சரிக்கை என்றே கூறி செய்திகள் வெளிவந்தன. |