இந்த நிலையில், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதும், அந்த இயக்கத்தின் தலைவர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்பதற்காக அவரைப் பற்றி புகழ்ந்து பேசக்கூடாது என்பதற்கும் எந்தச் சட்டத் தடை இருக்கிறது? தற்பொழுது பல திருத்தங்களுடன் பலப்படுத்தப்பட்டுள்ள சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் கூட, ஆதரித்துப் பேசுவதைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே. “இலங்கைத் தமிழர்களை அழிக்க அமைதிப் படையை ராஜீவ் காந்தி அனுப்பினார் என்று கூறி இந்திய நாட்டை கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது” என்று கூறி, தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமானை கைது செய்ய வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தங்கபாலு கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களைக் காக்க அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படை, தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது என்ற குற்றச்சாற்று அப்போதே இருந்ததே. தமிழ்நாட்டுத் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க ஈழத் தமிழர்களை காப்பாற்ற இலங்கைச் சென்ற அமைதிப் படை, சிறிலங்க அதிபர் கட்டளைக்கு உட்பட்டுச் செயல்பட்டு தமிழர்களுக்கு எதிராகத் திரும்பித் தாக்கியதே. அதன் காரணமாக அப்போதே அது கடும் விமர்சனத்திற்கு உள்ளானதே. தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, இரத்தக்கரையுடன் நாடு திரும்பும் அமைதிப் படையை வரவேற்கச் செல்ல மாட்டேன் என்று சட்டப்பேரவையிலேயே அன்றும் முதலமைச்சராக இருந்த கருணாநிதி கூறினாரே. அது சட்டப்படித் தவறா என்ன? அது இந்தியாவை கொச்சைப்படுத்தும் அல்லது அவமதிக்கும் வார்த்தைகளோ அல்லது நடவடிக்கையோ அல்ல, மத்திய அரசின், அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் நடவடிக்கை மீதான விமர்சனம் அல்லது எதிர்ப்பு அவ்வளவே. இதையெல்லாம் காலம் கடந்து உணர்ந்த பின்னர்தானே அக்கட்சியுடன் தேர்தல் உறவு வைத்து மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது காங்கிரஸ், மாநிலத்திலும் ஆட்சியில் பங்கு கேட்டும் வருகிறது.இன்று கூட பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசின் நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றதே. இலங்கை இனப் பிரச்சனையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விமர்சிப்பது, இந்திய நாட்டை விமர்சிப்பதாகவோ அல்லது அவமதிப்பதாகவோ ஆகாது. அப்படி எந்தச் சட்டமும் கூறவில்லை.அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையில் கூட மத்திய அரசின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது நாட்டை அவமதிக்கும் செயலா? இல்லை. அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் அல்லது முறைபடுத்தக்கோரும் செயல்களே.இப்படித்தான், இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் தமிழ் உணர்வாளர்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்துப் பேசி வருகிறார்கள். அது ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாயினும், இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளாயினும் அதன் மீது தங்களுடைய கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார்கள். இதற்கு பதிலளித்து தங்கள் தரப்பு கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு உரிமையும் உள்ளது. ஆனால், தங்கள் தலைவர்களைப் பற்றியும், அரசைப் பற்றியும் எதிர்த்து கருத்துக் கூறுபவர்களை தேச விரோதிகள் என்பதும், அவர்களை உடனே கைது செய்து உள்ளே வைக்க வேண்டும் என்று கூறுவதும் அரசியல் ரீதியான சரியான பார்வையல்ல. இன்றைக்கு தி.மு.க. அரசு, அருதிப் பெரும்பான்மை இல்லாத அரசாக உள்ளதால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸை நம்பி காலம் தள்ளும் நிலை உள்ளது. எனவே காங்கிரஸ் கேட்கிறது, தி.மு.க. (கைது) செய்கிறது. தமிழர்களின் நிலையை விட பரிதாபகரமானதாக இருக்கிறது தி.மு.க. அரசின் நிலை!ஆனால் தமிழக மக்கள் இந்த அகில இந்தியக் கட்சியை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். இலங்கைத் தமிழர்கள் மீது ஒரு திட்டமிட்ட இனப் படுகொலையை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறிலங்க அரசைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை கூட விடவில்லை. சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு ‘நிபந்தனையுடன் கூடிய ஆதரவு’ தெரிவிப்பதோடு நின்றுவிடுகிறது. மத்திய அரசோ ஆழ்ந்த நிதானம் காட்டி வருகிறது. அங்கு இனப் படுகொலை தடையற்றுத் தொடர்கிறது. நேற்றுக் கூட அங்கு சிறிலங்க விமானம் நடத்திய குண்டு வீச்சில் 6 மாதக் குழந்தை கொல்லப்பட்டுள்ளது. இப்படிபட்ட அத்துமீறல்களையெல்லாம் கண்டு கொள்ளாத ஒரே தமிழ்நாட்டுக் கட்சி காங்கிரஸ்தான்.இப்படிபட்ட போக்கு அக்கட்சியை மக்களிடமிருந்து மேலும் தனிமைப்படுத்திவிடும். அப்படி தனிமைபட்டதால்தான் காங்கிரஸ் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தனது வேர்களை இழந்துவிட்டது. மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க இனிமேலும் தவறினால், இந்திய அரசியலில் பல வரலாறுளைப் படைத்த காங்கிரஸ் கட்சி, வரலாற்றில் மட்டுமே காணப்படும் கட்சியாகிவிடும். |