மும்பைத் தாக்குதல் மீது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, பயங்கரவாத பிரச்சனையை ஐ.நா. அவைக்கு கொண்டு சென்றது உரிய பயனளிக்குமா என்பது சந்தேகத்திற்குரியது என்று கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி, பயங்கரவாதம் நமது தனித்த பிரச்சனையே என்றும், அதனை நமது பலத்தைக் கொண்டே சமாளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.அத்வானி கூறியுள்ள இந்த இரண்டு கருத்துகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதிலும், அவைகள் ஆழமான விவாதத்திற்குரியது என்பதிலும் சந்தேமில்லை. பயங்கரவாதப் பிரச்சனையை ஏன் ஐ.நா.விற்கு கொண்டு செல்லக் கூடாது என்பதற்கு ஒரு ஒப்புமையையும் அத்வானி அளித்துள்ளார். காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா.விற்கு கொண்டு சென்றதன் மூலம் அது சர்வதேச பிரச்சனை ஆக்கப்பட்டுவிட்டது. அதனால் மூன்றாவது நாட்டின் அல்லது நாடுகளின் தலையீட்டிற்கு அது வழிகோலிவிட்டது என்றும், அதன் காரணமாகவே இன்று வரை அப்பிரச்சனைக்கு நம்மால் தீர்வு காண முடியவில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சி பலமுறை கூறிவந்துள்ளது. அதனால்தான் ஐ.நா.விற்கு பயங்கரவாதத்தைக் கொண்டு சென்று மீண்டும் ஒரு தவறைச் செய்யக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவின் பிரிவினையை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக பிரிக்கப்பட்ட நிலையில், ஜம்மு- காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக பிரித்துவிடப்பட்டாலும், அதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளாத ஒரு அரசியல் சூழலிலேயே 1948ஆம் ஆண்டு பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் காஷ்மீருக்குள் புகுந்த பத்தானியர்களுடன் மறைமுகமாகப் புகுந்த பாகிஸ்தான் இராணுவம், காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தது. பிரிவினையின்படி, இந்தியாவிற்குச் சொந்தமாகிவிட்ட அப்பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்ததால் அப்பிரச்சனையை (வெள்ளையரின் ‘ஆலோசனையின்படி’) ஐ.நா.விற்கு கொண்டு சென்று இந்தியா. காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா!அதாவது போர் தொடுப்பதன் மூலம் அன்னிய நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை மீட்காமல், ஐ.நா. எனும் உலக நாடுகளின் அவையை நியாயத்தின் பாற்பட்டு நாடியது இந்தியா. அது இன்றுவரை ஒரு பலவீனமான முடிவாக கருதப்பாட்டாலும், அப்படிப்பட்ட முடிவிற்கு ஒரு பலமான அடிப்படை இந்தியாவிற்குச் சாதமாக இருந்தது. ஜம்மு-காஷ்மீர் பகுதி நம்மோடு இணைவதற்கு அப்பகுதியின் அரசராக இருந்த ஹரி சிங் கையெழுத்திட்டு சம்மதித்ததைவிட, காஷ்மீர் மக்களின் ஏகோபித்த தலைவராக இருந்த ஷேக் அப்துல்லா, இந்தியாவோடு இணைவதை ஆதரித்தது மட்டுமின்றி, அதற்கு அம்மக்களின் ஒருமித்த ஆதரவை உறுதி செய்தது இந்தியாவிற்கு ஒரு பலமான அடிப்படையானது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீ நகரை பாகிஸ்தானியப் படைகள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் மாபெரும் மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஷேக் அப்துல்லா, ஏன் இந்தியாவுடன் நாம் இணைய வேண்டும் என்று பேசியது வரலாற்றுச் சிறப்புமிக்கப் பேருரையாகும். ( ஷேக் அப்துல்லாவின் உரை) இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது அதீத பற்றுக்கொண்ட, காஷ்மீர் சிங்கம் என்று பெருமையுடன் அழைக்கபட்ட, ஷேக் அப்துல்லாவின் முடிவே ஜம்மு-காஷ்மீர் இன்றுவரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று நாம் மிகுந்த உரிமையுடன் கூறிக்கொள்வதற்கு அடிப்படையாகும். |