இந்தியாவின் பிரதமராக 11 மாதங்கள் மட்டுமே இருந்து, தான் நடைமுறைப்படுத்திய ஒரு கொள்கைக்காக பதவி இழந்த பின்னரும், ஒரு பெரும் அரசியல் சக்தியாகவும், மக்கள் தலைவராகவும் திகழ்ந்த ஒரே இந்திய அரசியல் தலைவர் விஸ்வநாத் பிரதாப் சிங்.சுதந்திர இந்தியாவில் காங்கிரஸிற்கு எதிராக ஒரு ஜனநாயக - அரசியல் இயக்கத்தை உருவாக்கி, அதன் மூலம் மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஒரு பெரும் ஆட்சி மாற்றத்தை உருவாக்கினார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். ஆனால் காங்கிரஸிற்கு எதிரான அந்த அரசியல் இயக்கம் நீடிக்கவில்லை, ஆட்சியை கைப்பற்றியதும் அது திசைமாறி, அதிகாரப் போட்டியாகி அரசை மட்டுமின்றி, மக்கள் மனதில் இருந்தும் வேரின்றி அகன்றது.1977 ஆம் ஆண்டு இந்திய ஜனநாயகத்தில் நடந்த அந்த மாபெரும் அரசியல் மாற்றத்திற்குப் பிறகு, காங்கிரஸிற்கு எதிராக இந்திய நாடு தழுவிய அளவில் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கியவர் விஸ்வநாத் பிரதாப் சிங். 1989 ஆம் ஆண்டு அவர் உருவாக்கிய ஜனதா தளம் கட்சி, ஒரே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சியுடனும், இடதுசாரிகளுடனும் கூட்டணி அமைத்தது மட்டுமின்றி, தி.மு.க., தெலுங்கு தேசம், அசாம் கன பரிஷத், சிரோமணி அகாலி தள், காஷ்மீரின் தேசிய மாநாடு, தேவிலாலின் இராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய மாநில கட்சிகளுடனும் இணைந்து வலிமையான ஒரு அரசியல் அமைப்பை (தேசிய முன்னணி) உருவாக்கி காங்கிரஸை தோற்கடித்தது. வி.பி. சிங் தலைமையில் அமைந்த தேசிய முன்னணி அரசிற்கு பா.ஜ.க.வும், இடதுசாரிகளும் வெளியில் இருந்து ஆதரவளித்தன. ஆனால் அது சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. பிரதமர் தேர்விலேயே சிக்கல் எழுந்தது. வி.பி. சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதை சந்திரசேகர் எதிர்த்தார். தேவிலாலின் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமரானார். வி.பி. சிங்கின் அரசு சீரிய நிர்வாகத்துடன் கூடிய சிறந்த ஆட்சியாக அமைந்தது. மக்கள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டார் வி.பி.சிங். தமிழ்நாடு-கர்நாடக அரசுகளுக்கு இடையிலான காவிரி நதி நீர்ப் பகிர்வு பிரச்சனைக்கு நடுவர் மன்றம் அமைக்க ஒப்புதல் தந்தார். இப்பிரச்சனையை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்று கூறி கர்நாடக அரசுகள் பிரச்சனையை இழுத்தடித்துக் கொண்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தினார்!நமது நாட்டின் மக்கள் தொகையில் 55 விழுக்காடு உள்ள இதர பிற்படுத்தப்டடோருக்கு மத்திய அரசு, அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் உரிய வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அவர்களின் நிலை குறித்து ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்ட நீதிபதி பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையிலான குழு மத்திய அரசிற்கு பரிந்துரை செய்திருந்தது.1977 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸை வீழ்த்திவிட்டு மத்தியில் ஆட்சியமைத்த ஜனதா அரசால் அமைக்கப்பட்டது மண்டல் ஆணையம். 3 ஆண்டுக் காலம் தீவிரமாக ஆய்வு செய்து மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் எந்த அளவிற்கு உள்ளார்கள் என்பதை கண்டறிந்த நீதிபதி மண்டல், 1980ஆம் ஆண்டு அந்த அறிக்கையை மத்திய அரசிடம் (அப்போது ஜனதா அரசு கவிழ்ந்து தேர்தல் நடந்து மீண்டும் காங்கிரஸ் அரசு இந்திரா காந்தி தலைமையில் அமைந்திருந்தது) அளித்தது.அந்த அறிக்கையை நடைமுறைபடுத்தப்படாமல் கிடப்பில் போட்டது இந்திரா அரசு. மண்டல் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் மண்டல் அறிக்கை மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆனால் பயனில்லை.வி.பி.சிங் அரசு - தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வற்புறுத்தலால் - மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்த முன் வந்தது. அதன் முதல் கட்டமாக, மத்திய அரசின் வேலை வாய்ப்புக்களில் இதர பிற்படுத்தப்பட்டவருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க அரசு உத்தரவைப் பிறப்பித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. டெல்லியில் மேல் தட்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆட்சிக்கு ஆதரவளித்துவந்த பா.ஜ.க. ஆதரவு அளித்தது. முன்னேறிய சமூகத்தினரின் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பளித்தால் தகுதி, திறமை போய்விடும் என்று கூக்குரலிட்டார்கள். காங்கிரஸ் கட்சியும் மண்டல் |