“அமெரிக்கர்களாகிய நாம் மாற்றத்திற்குத் தயாராகிவிட்டோம். அந்த மாற்றம் மிகச் சாதாரணமாக ஏற்பட்டுவிடாது, அதற்கு சில காலம் ஆகலாம். எனது இந்தப் பதவிக் காலம் கூட அதற்கு போதாமல் போகலாம். ஆனால் அந்த மாற்றத்திற்கு நாம் தயாராகிவிட்டோம். எனக்கு நீங்கள் அளித்துள்ள இந்த வெற்றி அதைத்தான் குறிக்கிறது. நாம் செய்து முடிப்போம்”.உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்நாட்டின் வரலாறு காணாத மாபெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமின்றி, முதல் கருப்பின அமெரிக்கர் ஒருவர் அந்நாட்டு குடியரசுத் தலைவராகப் பொறுப்பை ஏற்கும் பெருமையையும் பெற்ற பராக் ஹூசேன் ஒபாமா, வெற்றி அறிவிப்பு வந்தப் பிறகு ஆற்றிய உரை அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது.அந்தக் கணத்தில் உலகத்தின் கவனம் ஒரு மனிதனின் மீது பதிந்திருந்தது. அமெரிக்கர்கள் அவரது வெற்றியை ஒரு விடிவின் துவக்கமாகக் கருதினார்கள். ஆனால், உலகம் வேறொரு கோணத்தில் அந்த வெற்றியை வரவேற்றது. உலகம் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் அமெரிக்கர்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தையெல்லாம் விட மிக ஆழமானது.ஒபாமாவின் வெற்றியைப் பாராட்டிய பல உலகத் தலைவர்கள் இது நாள் வரை அமெரிக்க எதிர்ப்பாளர்கள். தங்களின் நாட்டு நலன் அமெரிக்க சுய நலனிற்காக பலியிடப்படுகிறது என்று கூறி, ஆண்டாட்டுக் காலமாக எதிர்த்து வந்தவர்கள் அவர்கள். ஆயினும் ஒபாமாவை வாழ்த்தினார்கள், காரணம், அமெரிக்காவின் சர்வதேச அணுகுமுறையில் மாற்றம் வேண்டும் என்பதை இவர்கள் பெரிதும் எதிர்பார்ப்பதுதான். சப் பிரைம் கிரைசிஸ் என்றழைக்கப்பட்ட (கடனைத் திருப்பிக் கட்டும் திறனைக் கொண்டவர்கள் அல்ல என்று தெரிந்தும் அதிக வட்டியில் அவர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுக் கடன்கள்) வராக் கடன்களால் அமெரிக்க நாட்டு வங்கிகளுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய நிதிச் சிக்கலும், கடன் அளிக்கப்பட்ட வீடுகளை வாங்குவதற்கு ஆளில்லாத காரணத்தால் அதில் முடங்கிய நிதியால் ஏற்பட்ட நெருக்கடியும், அதன் காரணமாக அந்நாட்டு பெரும் நிறுவனங்கள் பல திவாலானதாலும் கடும் பொருளாதாரப் பின்னடைவிற்கு அமெரிக்கா தள்ளப்பட்ட நிலையில், அந்நாட்டின் 44வது குடியரசுத் தலைவராக அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பராக் ஒபாமா பொறுப்பேற்கும் போது ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் உள்நாட்டு பொருளாதாரமும், அயல்நாட்டு உறவுகளும் எப்படிப்பட்ட நிலையில் இருக்கும்? இதுதான் இன்றுள்ள மிகப்பெரிய கேள்வியாகும், அந்நாட்டிற்கு மட்டுமல்ல, உலக அளவில் பதில் தேடப்படும் கேள்வி இது.“நிதி நெருக்கடி உச்ச கட்டத்தை எட்டிய நிலையில், ஒரு பலவீனமான பொருளாதாரத்தில் அமெரிக்கா உழலும் சூழலிலும், உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவின் காரணமாக அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளிகளும் பலவீனமான பொருளாதாரத்தால் கடும் சோதனைக்குள்ளாகியுள்ள கட்டத்திலேயே ஒபாமா பதவி ஏற்கப் போகிறார்” என்று டெல்லியில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய தலைமைப் பண்பு மாநாட்டில் உரையாற்றிய சர்வதேச அரசியல் உறவுகள் தொடர்பான ஆய்வு வல்லுனர்களான கேரி சமோர், கார்ல் இண்டர்ஃபர்த், வாலி நாசர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.‘புஷ்-ஷிற்குப் பிறகு அமெரிக்கா’ என்ற தலைப்பில் உரையாற்றிய இவர்கள், உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவு அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளை பலவீனப்படுத்தி கட்டுப்போட்டுள்ள நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவரும் சமூக, இன, அரசியல் எழுச்சிகளும் போராட்டங்களும் வலிமைபெறும் என்றும், அதனை சர்வதேச அளவில் கையாளும் வலிமையற்ற நிலையில் அமெரிக்கா இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். ஆக இரண்டு முக்கிய சவால்கள் ஒபாமாவை (அமெரிக்காவை) எதிர்நோக்கியுள்ளன. ஒன்று, அமெரிக்காவையும் உள்ளடக்கிய உலகளாவிய பொருளாதார பின்னடைவை தடுத்து நிறுத்தி, மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல வழிகாண்பது. இரண்டு, வியட்நாமிற்குப் பிறகு அமெரிக்காவின் புதைசேறாக ஆகியுள்ள ஈராக்கிலிருந்தும், ஆஃப்கானிஸ்தானத்திலிருந்தும் அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதும், இஸ்ரேலின் அடாவடித்தனத்தால் அமைதியிழந்து கிடக்கும் பாலஸ்தீனப் பிரச்சனைக்கும் தீர்வு காணும் அரசியல் முயற்சிகளை துவக்குவதுமாகும்.சரிந்துக் கொண்டிருக்கும் பொருளாதாரம்!வராக் கடன்களால் திவலான லீமேன் பிரதர்ஸ், அமெரிக்க வங்கி ஆகிய முதலீட்டு வங்கிகளும், ஏ.ஐ.ஜி. என்றழைக்கப்படும் அமெரிக்க இண்டர்நேஷனல் குரூப் எனும் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமும், வாஷிங்டன் மியூச்சுவல், ஃபிரெட்டி மாக், ஃபேன்னி மே போன்ற பரஸ்பர நிதி நிறுவனங்களும் ஏற்படுத்திய நிதி நெருக்கடி |