உலகின் முதல் செயற்கைக்கோளை ரஷ்யர்கள் ஏவியதை கேள்விப்பட்ட அமெரிக்காவோ, தலையிலடித்துக் கொள்ளாத குறைதான். உலகம் முழுவதிலும் இருந்து ரஷ்யாவிற்கு குவியும் பாராட்டுக்கள் அனைத்தும் அமெரிக்கர்களின் தலையில் இடியாக இறங்கியது.
அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த ஐசனோவர், விண்வெளிப் போட்டியில் ரஷ்யாவை மண்ணைக் கவ்வ வைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க கோரி, வெற்றுச் காசோலையில் கையெழுத்திட்டுக் கொடுத்தார் என்ற தகவல்கள் கூட அப்போது உலகம் முழுக்க இறக்கை கட்டிப் பறந்தது (ஸ்புட்னிக் போல...).
ஆனால் ரஷ்யர்கள் மீண்டும் தங்கள் தலையில் ஆணியடிப்பார்கள் என அமெரிக்கா சிறிதும் நினைக்கவில்லை. ஸ்புட்னிக் வெற்றி மற்றும் அதன் மூலம் கிடைத்த புகழை நினைத்து நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டிருந்த குருச்சேவிடம், தலைமை விஞ்ஞானி மீண்டும் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த திட்டத்தை காதில் ஓதினார்.
அதன் காரணமாக உருவானது தான் ஸ்புட்னிக்-2... முதன் முதலில் விண்வெளியில் ஒரு உயிரினத்தை ஏற்றிச் சென்ற செயற்கைக்கோள். அதில் அனுப்பப்பட்ட பெண் நாய்தான் லைக்கா...
பிராணிகள் பாதுகாப்பகத்தில் இருந்து அவசர அவசரமாக செயற்கைக்கோள் ஏவும் சோதனைக் கூடத்துக்கு கொண்டு வரப்பட்ட லைக்காவுக்கு, அங்கிருந்த விஞ்ஞானிகள், விண்வெளியில் பயணிப்பதற்கு தேவையான சில பயிற்சிகளையும் அளித்ததாக ராணுவ வட்டாரங்கள் தமாஷாக கூறியதாக தகவல்.
ஆண்டு 1957... நவம்பர் மாதம் 3ஆம் தேதி விண்வெளிக்கு சென்ற முதல் பிராணி என்ற பெருமையுடன் ஸ்புட்னிக்-2 செயற்கைக்கோளில் சரித்திரப் புகழ் பயணத்தை துவக்கிய லைக்கா... மீண்டும் பூமிக்கு திரும்பவேயில்லை. விண்கலம் விண்வெளியை எட்டிய போது ஏற்பட்ட அதிக வெப்பத்தால் உடல் கருகி வீரமரணம் (!) அடைந்தது.
அந்தக் கால கட்டத்தில் தங்கள் குழந்தைகளுக்கு நிலாச்சோறு ஊட்டிய ரஷ்ய தாய்மார்கள், வான்வெளியில் தெரியும் ஏதாவது ஒரு நட்சத்திரத்தை காட்டி, "அங்கே பார் லைக்கா கண் சிமிட்டுகிறது... வாலாட்டுகிறது" என்று கூறியிருக்கவும் வாய்ப்புகள் உள்ளதை நிச்சயம் மறுக்க முடியாது.
ஸ்புட்னிக்-2 செயற்கைக்கோளை ஏவியதிலும் ரஷ்யாவிற்கு பாராட்டு மழை... இது அமெரிக்காவின் வயிற்றெரிச்சலை மேலும் அதிகரித்ததன் விளைவாகவே நாசா விண்வெளி நிறுவனமும், இணையதளத்தை கண்டறிந்த 'அர்ப்பா' என்ற ராணுவ ஆராய்ச்சி நிறுவனமும் உருவாக்கப்பட்டது. (இச்சம்பவம் நிகழ்ந்த 12 ஆண்டுகளுக்கு பின் நாசா நிறுவனம் நிலாவில் மனிதனை கால்பதிக்க வைத்து பழிதீர்த்துக் கொண்டது தனிக்கதை)
ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத ரஷ்யா, ஸ்புட்னிக்-3 மற்றும் 4 என அடுத்தடுத்து 2 செயற்கைக்கோள்களிலும் நாய்களை ஏற்றி விண்வெளியில் அனுப்பியதுடன், அவற்றை உயிருடன் மீண்டும் பூமிக்கு திருப்பிக் கொண்டு வந்து, தனது விண்வெளி மகுடத்தில் மேலும் ஒரு தங்க இறகை சொருகிக் கொண்டது. பெல்கா, ஸ்டிரெல்கா என இந்த 2 நாய்களுக்கும் பெயரிட்ட விஷயத்திலும் ரஷ்யர்களின் புத்திசாலித்தனம் வெளிப்பட்டுள்ளதை குறிப்பிடாமல் இருக்க முடியாது... இப்படி சரித்திரப் புகழ் பெற்ற பெண் நாய் லைக்காவுக்கு, ரஷ்ய அரசு ஏன் 2 மீட்டர் உயர சிலை வைத்து மரியாதை செய்தது என்பதை இப்போது புரிந்து கொண்டீர்களா.
|