இந்தக் கேள்விக்கு பதில் காண்பதற்கு முன்பு, இரு நாடுகளும் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய நிகழ்வை நாம் கவனித்தாக வேண்டும். அது ஹரியானா சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த காலித் மெஹம்மது என்ற 26 வயது பாகிஸ்தானியரின் தீடீர் மரணம்.
இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியைக் காண இந்தியா வந்த காலித் மெஹம்மது மீண்டும் பாகிஸ்தான் திரும்பவில்லை என்றும், அவர் இந்தியாவில் உளவு பார்த்த தாகவும் கூறி கைது செய்யப்பட்டு (இந்தக் கைது குறித்து பாகிஸ்தான் அரசிற்கு இந்தியா தெரிவிக்கவில்லை) சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
சிறையில் கடுமையான சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால்தான் காலித் மரணமடைந்ததாக அவருடைய உறவினர்களும், பாகிஸ்தான் அரசும் குற்றம்சாற்றின.
இதையடுத்து காலித் மரணம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது.
காலித் மெஹம்மதுவின் மரணத்தினால் பாகிஸ்தானில் ஏற்பட்ட எதிர்ப்பையடுத்தே, சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது பழிக்குப் பழி என்பது போன்ற நடவடிக்கையே என்றாலும், முறை தவறிய ஒரு நடவடிக்கையின் விளைவாக இரு நாடுகளிலும் ஏற்படக்கூடிய உணர்ச்சிக் கொந்தளிப்பை அடக்கவும், தவிர்க்கவும் இரு அரசுகளுமே இப்படிப்பட்ட பதில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
இந்தப் பின்னணியில் சரப்ஜித் சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டுமெனில் ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக பாகிஸ்தான் கேட்கும் இந்திய சிறைகளில் உள்ள சிலரை விடுவிப்பதில் (அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாற்றப்பட்டிராத நிலையில்) எந்த தவறும் இல்லை.
அது சரப்ஜித் சிங்கின் உயிரை காப்பது மட்டுமின்றி, இப்படிப்பட்ட சட்டம் சார்ந்த பிரச்சனைகளிலும் இரு நாடுகளுக்கு இடையே நம்பிக்கை ஏற்பட வழிவகுக்கும்.
பாகிஸ்தானில் தற்பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்துள்ள நிலையில், இப்படிப்பட்ட நல்லெண்ண நடவடிக்கை காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு இருதரப்புப் பிரச்சனைகளில் முன்னேற்றம் காண உதவிடும்.
ஒன்றைத் தராமல் மற்றொன்றைப் பெற முடியாது. கருணை காட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறவும் எதையாவது நாம் அளித்தாக வேண்டும்.
லாகூர் சிறையில் கடந்த 17 ஆண்டுகளாக மரணத்தை எதிர்நோக்கி செத்துக் கொண்டிருக்கும் சரப்ஜித் சிங்கைப் போன்ற அப்பாவிகளைக் காப்பாற்ற இதனைச் செய்யலாம்.
|