லாகூர் தொடர் குண்டு வெடிப்பில் குற்றம்சாற்றப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கிற்கு பாகிஸ்தான் அரசு கருணை காட்ட வேண்டும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்த வேண்டுகோளையடுத்து, தூக்கு தண்டனை நிறைவேற்றத்தை மேலும் ஒரு மாதத்திற்குத் தள்ளிவைத்துள்ளது பாகிஸ்தான் அரசு.
சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஏற்கனவே ஏப்ரல் 1ஆம் தேதி நாள் குறிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கருணை காட்டுமாறு இந்தியத் தலைவர்கள் பலரும் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு தண்டனை நிறைவேற்றத்தைத் தள்ளிவைத்த பாகிஸ்தான் அரசு, தற்பொழுது நமது அயலுறவு அமைச்சர் விடுத்த வேண்டுகோளை கருத்தில் கொண்டு மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளது.
பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கை உளமார்ந்த பாராட்டிற்குறியது என்பதில் இரு வேறுபட்ட கருத்துகள் இருப்பதற்கில்லை. அதே நேரத்தில் இப்படி ஒவ்வொரு முறையும் இந்தியா (அரசு) விடுக்கும் வேண்டுகோளிற்கு செவிசாய்க்கும் பாகிஸ்தான் அரசும், அதிபர் பர்வேஷ் முஷாரஃபும் சரப்ஜித்திற்கு முழுமையாகக் கருணை காட்டி ஏன் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.
பாகிஸ்தான் அரசின் அல்லது அந்நாட்டு நிர்வாகத்தின் இப்படிப்பட்ட தள்ளிவைப்பு நடவடிக்கைகள் அந்நாடு, நம் நாட்டிடம் ஏதோ எதிர்பார்ப்பதையே சுட்டுகாட்டுவதாகவுள்ளது. இதனை ஏனோ இந்திய அரசு வெளிக்காட்டாமல் தயங்குகிறது.
கருணை என்பதில் இரு அளவு கோள்கள் கூடாது என்கிறதா பாகிஸ்தான்? அப்படி அந்நாடு ஒரு கேள்வியை எழுப்பினால் அதற்கு உரிய பதிலளித்திட வேண்டிய கட்டாயம் இந்திய அரசிற்கு உண்டு.
|