ஏழை எளிய மக்களுக்கு அன்றாட தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த 6 மாதங்களாக வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. விலை கொடுத்து வாங்க முடியாமல் சராசரி வருவாய் உள்ள குடும்பங்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. அந்த அளவுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது.
காய்கறி, பழங்கள், எண்ணெய், மளிகைப் பொருட்கள், பாலுணவுகள் என்று அனைத்துப் பொருட்களின் விலைகளும் தாறுமாறாக அதிகரித்துள்ளன. அத்யாவசியப் பொருட்களின் விலைகள் கடந்த 6 மாதங்கிளில் எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை முழுமையாக அறிந்துகொள்ள தமிழ்.வெப்துனியா.காம் நேரடி விவர சேகரிப்பில் ஈடுபட்டது. பல்வேறு பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்தும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது.
காய்கறிகள் விளைச்சல் தமிழகத்தை விட அதிகமுள்ள கர்நாடகாவில் இருந்துதான் அதிக அளவிற்குத் தமிழகத்திற்கு வருகிறது (ஒகேனக்கல் பிரச்சனை ஏற்பட்டபோது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு குறைந்த அளவிலே காய்கறிகள் வந்தது, இதனால் இதன் விலை அதிக அளவு உயர்ந்தது). இப்படி சில சிக்கல்களால் விலையேற்றம் அவ்வப்போது ஏற்பட்டாலும், நிலைமை சீரடைந்ததும் விலைகள் குறைந்துவிடும். ஆனால், ஏறிய விலை (சில பொருட்களைத் தவிர) இறங்கவேயில்லை என்பது நமது நேரடி ஆய்வில் தெரிந்தது.
கடந்த 6 மாதத்தை பொறுத்தவரை இப்போது காய்கறி விலைகள் அதிகமாகவே இருக்கிறது என்று கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் செளந்தரராஜன் கூறினார்.
|