இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் சாம்சன் டி செளஸா மற்றும் பிளாசிடோ கார்வலோ ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து, சில தகவல்களை வெளியிட்டனர். அதில், கார்லவோ என்பவரால் ஸ்கார்லெட்டுக்கு போதைப் பொருள் கொடுக்கப்பட்டு, அதனால் சுயநினைவை முழுவதுமாக இழந்தார் ஸ்கார்லெட். அதன்பின் அப்பெண்ணைக் கற்பழித்துவிட்டு கடற்கரையோரம் போட்டுவிட்டு கார்வலோ சென்றுவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விசாரணை முடிவுக்கு வராமல் தொடர்ந்து திருப்பங்கள் இருந்துவரும் நிலையில், இதன் முடிவைப் பற்றி நாம் அறிந்துகொள்வதற்கு முன் இந்தச் சம்பவத்தின் எதிரொலியால் சில சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன.
அ) ஸ்கார்லெட் மரணத்திற்குப் பிறகு தீவிரமாக விசாரிக்காமலேயே முதல் முடிவை கோவா காவல்துறை தெரிவித்தது, அதன் அலட்சியப் போக்கு இன்றி வேறென்ன?
ஆ) கண்டிப்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்று தெரிந்தும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பையே பொருட்படுத்தாத கோவா காவல்துறை, உள்ளூர் மக்களின் பாதிப்பை சிரத்தையுடன் கண்டுகொள்ளுமா?
இ) அதிக அளவில் போதைப்பொருளை எடுத்துக்கொண்டதால் ஸ்கார்லெட் இறந்தார் என்று கூறும் கோவா காவல்துறை, கோவா கடற்கரைப் பகுதிகளில் போதைப் பொருள் கிடைப்பது சாதாரணமான ஒன்றே என்ற தொனியில் கூறியிருப்பது, கோவாவில் போதைப் பொருள் சகஜம் என்பதையே காட்டுகிறதல்லவா?
ஈ) 'இன்கிரெடிபிள் இந்தியா' அடைமொழியுடன் உலகம் முழுவதும் விளம்பரம் கொடுத்துவருகிறது மத்திய சுற்றுலாத் துறை. இந்நிலையில் ஸ்கார்லெட் விவகாரம், 'இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை' என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே உருவாக்காதா?
உ) வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் பயணிகளுக்கு இந்தியா மீதான நம்பகத்தன்மை குறைந்துவிடாதா?
ஸ்கார்லெட் விவகாரம் தொடர்பான விசாரணையை முழுவதுமாக முடித்துக்கொண்டு, கோவா காவல்துறை மூலம் தெளிவு கிடைத்தாலும்கூட, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எழுந்துள்ள அச்சம் முழுமையாக அகலுவதற்கு சற்று நாளாக வாய்ப்புண்டு.
|