சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலின் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி இறைவனை வழிபடச் சென்ற ஓதுவார் ஆறுமுகசாமியையும், அவருக்கு பாதுகாவலாகச் சென்ற காவல் துறையினரையும் அக்கோயிலின் தீட்சிதர்கள் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளது ஆன்மிக நெறிமுறைகளுக்கும், பக்தி பாரம்பரியத்திற்கும் இழைக்கப்பட்டுள்ள அவமானமாகும்.
உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்து சமய அறநிலைத் துறையின் செயலர் அளித்த அனுமதியின் அடிப்படையில்தான் சிவனடியார் ஆறுமுகசாமி - கோயிலில் நடைபெற வேண்டிய பூஜைக்குப் பின்னர் - சிற்றம்பல மேடையேறி தேவாரம் பாடச் சென்றார்.
உயர் நீதிமன்றம், இந்து அறநிலையத் துறை ஆகியவற்றின் உத்தரவின்படியே தேவாரம் பாட ஓதுவார் ஆறுமுகசாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று காவல் அதிகாரிகள் பிரதீப் குமார், செந்தில் வேலன் ஆகியோர் எடுத்துக் கூறியதற்குப் பிறகும் அதனைப் பொருட்படுத்தாமல், சிற்றம்பல மேடையேறி தேவாரம் பாடினால் அது தீட்டாகிவிடும் என்று கூச்சலிட்டு வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களை தடுத்து வன்முறையில் ஈடுபட்ட தீட்சிதர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்திய பின்னரே ஓதுவார் ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையேறி தேவாரப் பாடல்களைப் பாடியுள்ளார்.
அவர் தேவாரப் பாடலைப் பாடத் துவங்கியதும், அங்கிருந்த தீட்சிதர்கள் தில்லை நடராஜர் வீற்றிருக்கும் கருவறையை மறைத்து நின்றுள்ளனர். கடவுளைப் பார்த்து தேவாரத்தைப் பாட அனுமதிக்க மாட்டார்களாம்! என்ன அநியாயம் இது? இறைவனின் சன்னதியில் இறைவனைப் போற்றிப் பாடிய பக்திப் பாடலான தேவாரத்தைப் பாடுவதற்குத் தடையா? பக்திப் பாடலைப் பாடுவதனால் தீட்டாகிவிடுமா?
இன்றிலிருந்து 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை தில்லை நடராஜர் ஆலயத்தில் தேவாரம் பாடி வழிபாடு செய்யும் பாரம்பரியம் இருந்த்து. இடையில் கோயிலிற்குள் புகுந்து கோயிலையே தங்களுக்கு அளிக்கப்பட்ட சொத்து என்று கூறி, தமிழையே கோயிலிற்குள் நுழையாமல் தடுத்துவரும் இந்த தீட்சிதர் கூட்டம், அன்றைக்கு நந்தனாரைத் தடுத்து ஆன்மிகத்தை அவமானம் செய்ய முற்பட்டது. இன்று நீதிமன்ற, அரசு உத்தரவுகளை ஏற்க மறுத்து, புனிதமான, வரலாற்றுப் பெருமையும், ஆன்மிக மகத்துவமும் கொண்ட அந்த ஆலயத்தில் தனது ஆளுமையை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒரே நோக்குடன் இப்படிப்பட்ட கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இறைவனுக்கும் அவன் மீது பக்தி செலுத்தும் அன்பர்களுக்கும் இடையே குறுக்கே நிற்க இவர்கள் யார்?
|