அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு சேதுக் கால்வாய் திட்டத்தை கைகழுவிவிடும் என்று பரவலாக நிலவிவந்த எதிர்ப்பார்பை பொய்யாக்கி, அத்திட்டத்தை உறுதியாக நிறைவேற்றுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வாக்குமூலத்தின் வாயிலாக தெளிவாக நிரூபித்துள்ளது மத்திய அரசு.
ராமர் பாலம் சர்ச்சை கிளம்பியதிலிருந்து தனது நிலைப்பாட்டில் தடுமாறிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, சேதுக் கால்வாய் திட்டம் மாற்றுப் பாதையில் நிறைவேற்றப்படும் என்று கூறி, அதன் மூலம் அத்திட்டத்தை கிடப்பில் போடப்படுவதற்கான எல்லா சமிக்ஞைகளையும் கொடுத்தது.
ராமர் பால பிரச்சனையை பயன்படுத்தி, சேதுக் கால்வாய் திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்க நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பண்பாட்டுத் துறை அமைச்சர் அம்பிகா சோனிக்கும் (சேதுத் திட்டம் கிடப்பில் போடப்படும் என்பதை சொல்லாமல் சொல்லியவர்), கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலுவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அம்பிகா சோனி வெளியேறினார் என்றும், அதனால் மத்திய அரசு தாக்கல் செய்யவேண்டிய வாக்குமூலம் மீது இறுதி முடிவு எடுக்காமலேயே தள்ளிவைக்கப்பட்டது என்றும் செய்திகள் வந்தன.
மாற்றுப் பாதை சாத்தியமில்லை!
உச்ச நீதி மன்றத்தில் வாக்குமூலம் தாக்கல் செய்வதற்கு அளிக்கப்பட்ட கால அவகாசம் முடியும் தருவாயில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு, மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு (வாக்குமூலம்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனுவில், சேதுக் கால்வாய் திட்டத்தை ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட பாதையில் (பாதை எண் 6) தான் நிறைவேற்றப்படும், மாற்றுப் பாதையில் நிறைவேற்றுவதற்கான சாத்தியமில்லை என்று மத்திய அரசு கூறியிருப்பது மிக மிகச் சரியான, நேர்த்தியான முடிவாகும்.
|