ஆம், நீதி மன்றத்திற்கு எதிராகவும், நீதிபதிகளுக்கு எதிராகவும் உண்மையைக் கூறுவது குற்றம்தான், அதற்காக மன்னிப்பு கேட்காவிட்டால் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று கூறியுள்ளது இந்தியாவின் உச்ச நீதிமன்றம்!
நமது தேச வாழ்வில் ஊழல் இல்லாத இடமே இல்லை என்பதை இந்தியர்களாகிய நாம் நன்கு உணர்ந்திருந்தாலும், அது நீதிபதிகளையும், அதன் மூலம் நீதித் துறையையும் அரித்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியும் போது கவலைப்படுகின்றோம். ஏனெனில், அரசியல், அரசாங்கம், ஆட்சி, நாடாளுமன்றம், நிர்வாகம் என்ற நமது சமூக, அரசியல், பொருளாதார வாழ்விற்கும், இயக்கத்திற்கும் ஆதாரமான துறைகளை ஊழல் அரித்துத் தின்று திசைத் திருப்பிக் கொண்டிருக்கும் நிலையில், அவைகளை முறைபடுத்தி, சீர்படுத்தி, அரசமைப்பு ரீதியாக அவைகளிற்குறிய பாதையில் இயங்கிடச் செய்யும் ஒரே கருவி நீதிமன்றம்தான்.
எனவே, நீதித்துறையிலும் ஊழல் என்றறியும்போது நாம் பதறுகிறோம். நமது நாட்டின் ஜனநாயக கற்பைக் காப்பது இன்றுவரை நீதிமன்றங்கள்தான் என்ற நிலையும், நம்பிக்கையும் நமக்குள்ளது.
நமது சமூக, அரசியல், பொருளாதார வாழ்வின் அனைத்து பரிணாமங்களின் மீதும் முழுமையான முறைபடுத்து அதிகாரம் கொண்ட நீதித்துறையும் ஊழலிற்கு ஆட்பட்டு வருகிறது என்கின்ற தகவல்கள் வரத் தொடங்கிவிட்ட நிலையில், அதிர்ச்சித் தரத்தக்க ஒரு ஊழலை வெளிக்கொணர்ந்தார் பத்திரிக்கையாளர் ஒருவர்.
அப்துல் கலாமிற்கு அரஸ்ட் வாரண்ட்!
குடியரசுத் தலைவராக அப்துல் கலாமும், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வி.என். காரேயும் இருந்தபோது, அவர்களுக்கு எதிராக குஜராத் மாநில நீதிபதி ஒருவர் கைது உத்தரவுகளைப் பிறப்பித்தார்! எந்தக் குற்றத்திற்காக? யார் செய்த புகாரின் பேரில்? என்று கேட்கத் தோன்றுகிறதா?
யாரும் எந்தப் புகாரும் அளிக்கவில்லை. காசு கொடுத்தால் யாருக்கு எதிராக வேண்டுமானாலும் கைது உத்தரவை பெற முடியும்... என்று கூறப்பட்டதை நிரூபிக்க, ஸீ தொலைக்காட்சியின் செய்தியாளர் விஜய் சேகர், இதையே ‘பணியாகச் செய்யும்’ ஒரு வழக்கறிஞரைப் பிடித்து அவரிடம் ரூ.40,000 பணத்தைக் கொடுத்து, அன்று குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமிற்கு எதிராகவும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.என். காரே-க்கு எதிராகவும் கைது உத்தரவுகளைப் பெற்றார்.
பணத்தைக் கொடுத்தால்... எந்த வழக்கு, விசாரணையும் இன்றி கைது உத்தரவைப் பெற முடியும் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க, இதனைச் செய்து அதை ஸீ தொலைக்காட்சியிலும் ஒளிபரப்ப, நீதிமன்றத்தின் நிலை குறித்து நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
நீதித் துறையிலும் ஊழல் வேர்விட்டுப் பரவத் தொடங்கிவிட்டது என்பதையே தனது முயற்சியின் மூலம் செய்தியாளர் விஜய் சேகர் நாட்டிற்கு தெரியப்படுத்தினார். உண்மையை மிக ஆதாரப்பூர்வமாக வெளிக்கொணர்ந்த அவரை பாராட்டாமல், அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர்ந்து, மன்னிப்புக் கேள்... இல்லையென்றால் தண்டனை என்று கூறி, மன்னிப்பு கேட்பதற்கு 6 மாத கால அவகாசத்தையும் அளித்துள்ளது உச்ச நீதிமன்றம்!
|