செர்பியாவிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சுதந்திர நாடாக கொசோவோ பிரகடனம் வெளியிட்டதற்கு சிறலங்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது, எதிர்காலத்தைப் பொறுத்த அதன் அச்சத்தையும், அப்படி ஒரு நிலை தனது நாட்டில் ஏற்படும் சூழ்நிலை உருவாகிவருவதையும் சொல்லாமல் சொல்லுவதாக உள்ளது.
“கொசோவோ தன்னிச்சையாக சுதந்திர பிரகடனம் செய்திருப்பது சர்வதேச உறவுகளிலும், நாடுகளின் இறையாண்மை அடிப்படையிலான உலகளாவிய உறவுகளிலும் மாற்றவியலாத ஒரு முன்னுதாரனத்தை ஏற்படுத்திவிட்டது மட்டுமின்றி, சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கும் ஆபத்து உள்ளது” என்று சிறிலங்க அரசின் அயலுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
“கொசோவோ சுதந்திர பிரகடனம் செர்பிய நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஒப்புதலைப் பெறாதது மட்டுமின்றி, உறுப்பு நாடுகளின் இறைமையையும், ஒற்றுமையையும் உறுதி செய்யும் ஐ.நா. பிரகடனத்தை மீறியதாகும்” என்றும் சிறிலங்க அரசு கூறியுள்ளது.
கொசோவோ பிரச்சனைக்குத் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காணப்படவேண்டும் என்ற ஐ.நா.வின் தீர்மானத்தையும் (1244/1999) சிறிலங்க அரசு தனது நிலைப்பாட்டிற்கு சாதகமானதாக சுட்டிக்காட்டியுள்ளது.
கொசோவோ சுதந்திர பிரகடனத்திற்காக சிறிலங்க அரசு இவ்வளவு கவலைப்பட்டு, இத்தனை ‘தெளிவான’ அறிக்கையளிக்கக் காரணம் என்ன? என்ற ஒரு கேள்விக்கு விடை காண முற்பட்டால், அதில் அதன் ‘நலம்’ எந்த அளவிற்கு உள்ளது என்பது விளங்கிவிடும்.
யூகோஸ்லாவியா என்ற பெயரில் ஒரு நாடாக (கம்யூனிய ஆட்சியின் கீழ்) இருந்த காலத்தில் இருந்து இன்றைய செர்பிய நாட்டின் ஒரு அங்கமாக இருந்த காலம் வரை கொசோவோ என்ற அந்நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்துவரும் அல்பானிய இன மக்கள், சற்றேறக்குறைய கால் நூற்றாண்டு காலத்திற்கு எப்படிப்பட்ட இன ஒடுக்கலுக்கு ஆளாக்கப்பட்டார்கள் என்பதை அறிந்தவர்கள் அனைவரும், அம்மக்கள் தாங்கள் வாழும் பகுதியை தனி நாடாக பிரகடணம் செய்ததில் உள்ள நியாயத்தை உணர்வார்கள்.
(கொசோவோ போராட்டமும் விடுதலையும்)
|