இதனையடுத்து கொசோவோ அல்பானியர்களை கடுமையாக ஒடுக்கத் துவங்கினார் மிலாசவிச். அதுவரை அமைதி வழியில் போராடிய கொசோவோ மக்கள் ஆயுதமெடுத்தனர். கொசோவோ விடுதலை ராணுவம் அமைக்கப்பட்டது.
அந்நிய நாட்டிற்குள் புகும் ஆக்கிரமிப்புப் படையைப் போல செர்பிய ராணுவமும், மற்ற ஆயுதப்படைகளும் கொசோவோவிற்குள் புகுந்து தாக்கின. பல்லாயிரக்கக்கான அல்பானியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில்தான், 1998 ஆன் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி, ஐ.நா. பாதுகாப்பு பேரவை, அமைதியாகப் போராடிய கொசோவோ மக்கள் மீது மிக அதிகப்படியான அடக்குமுறையை செர்பிய காவல்துறை கட்டவிழ்த்து விட்டதென்று கூறி கண்டனம் செய்தது மட்டுமின்றி, யூகோஸ்லாவியாவிற்கு எதிராக ஆயுதத் தடையும் விதித்து தீர்மானம் (எண் 1169) நிறைவேற்றியது.
கொசோவோ மக்கள் மீது செர்பியா கட்டவிழுத்துவிட்ட வன்முறை ஐ.நா.வின் 7 வது விதிமுறைகளின் படி, சர்வதேச அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது என்றும் பாதுகாப்புப் பேரவை தனது தீர்மானத்தில் கூறியது.
இதற்குப் பிறகும் அல்பானியர்களுக்கு எதிரான இன ஒடுக்கல் குறையவில்லை, மாறாக அதிகரித்தது. கொசோவோ மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றும் திட்டத்துடன் தனது இன ஒடுக்கலை தொடர்ந்தது யூகோஸ்லாவிய அரசு. செர்பியாவின் எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள அல்பானியர்களை வன்முறையை ஏவி விரட்டியடித்தது. சொந்த நாட்டு மக்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையால் 3 லட்சம் அல்பானியர்கள் மலைப்பகுதிகளுக்கும், காடுகளுக்கும் விரட்டப்பட்டனர்.
இந்த நிலையில்தான் செர்பிய அரசின் ஒடுக்குமுறையில் இருந்து கொசோவோ மக்களைக் காக்க 1998 செப்டம்பரில் நேட்டோ படைகள் அந்நாட்டிற்குள் நுழைந்து செர்பிய படைகளை வெளியேற்றின.
கொசோவோவில் அமைதி நிலைநாட்டப்பட்டது. 1999 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் அதிகாரத்திற்குட்பட்ட இடைக்கால நிர்வாக அரசு ஏற்படுத்தப்பட்டது.
தன்னாட்சி உரிமை கோரி செர்பிய அரசுடன் கொசோவோ அரசியல் இயக்கங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத்தையடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் நாட்டின் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சுதந்திர பிரகடனம் செய்தது கொசோவோ.
|