என்ன இது? சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zone) என்று கேள்விப்பட்டுள்ளோம், சிறப்பு தூக்கு மண்டலங்கள் என்று எதையும் கேள்விப்பட்டதில்லையே என்று கேட்கத் தோன்றுகிறதா?
இப்படி அர்த்தம் அளிக்கும் வகையில்தான் நமது நாட்டில் விவசாயிகள் அதிகமாக தற்கொலை செய்து கொண்டு சாகும் மாநிலங்களைக் குறிப்பிட்டுள்ளது மத்திய அரசின் தேச குற்றப் பதிப்பு வாரியம் (National Crime Records Bureau - NCRB).
தொழில் வளர்ச்சியில் முன்னனியில் உள்ள மாநிலமான மராட்டியம், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, சட்டீஸ்கர், கேரளா ஆகிய மாநிலங்களில்தான் விவசாயிகள் மிக அதிக அளவிற்கு தற்கொலை செய்து கொண்டு உயிரிழப்பது தொடர்ந்து - இன்று நேற்றல்ல, 1997 முதல் 2006 ஆம் ஆண்டுவரை - நடந்து வருவதால் இம்மாநிலங்களை சிறப்பு தூக்கு மண்டலங்கள் (Special Elimination Zone) என்று தேச குற்றப் பதிப்பு வாரியம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9 விழுக்காட்டைத் தாண்டும் என்றும், நாட்டின் தொழில் வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது என்றும், தகவல் தொழில் நுட்பத்தில் ஒரு வல்லரசாக உருவாகி வருகிறது என்றும், உலகின் மூளைப் பலமாக உருவெடுத்து வருகிறது என்றும் அரசாலும், பெருவாரியான ஊடகங்களாலும் நாளும் சித்தரிக்கப்படும் நம் நாட்டின் கிராமப் புற அவல நிலையைத்தான் இப்படிப்பட்ட வார்த்தைகளால் சித்தரித்துள்ளது தேச குற்றப் பதிப்பு வாரியம்.
2006 ஆன் ஆண்டில் மட்டும் 17,060 விவசாயிகள் தற்கொலை!
பொருளாதார சீர்திருத்தம், தாராளமயமாக்கல் ஆகியவற்றால் நமது நாடு முன்னேற்றப் பாதையில் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்று நாம் கூறிக்கொண்டிருந்த நேரத்தில்தான் நமது நாட்டின் கிராம்ப் புறங்களில் கடன் தொல்லைக் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்ற அதிர்ச்சி செய்தி நம்மை உலுக்கியது.
அதுவரை தற்கொலை உள்ளிட்ட செயற்கை மரணங்களை பொதுவாக பட்டியலிட்ட தேச குற்றப் பதிப்பு வாரியம், 1997 ஆம் ஆண்டிலிருந்து விவசாயிகள் தற்கொலையை தனியாக பட்டியலிட தொடங்கிய போதுதான், நமது நாட்டின் புராதனத் தொழில் எப்படிப்பட்ட சிக்கலை சந்தித்து வருகிறது என்ற விவரம் தெரியவந்தது.
|