மீனவர் நலனுக்கு முன்னுரிமை!
தமிழக மீனவர் நலனுக்கு உயர் முன்னுரிமை அளித்து, அவர்களுக்கென தனி நல வாரியம் அமைத்துள்ளதோடு, கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது காணாமல் போகும் மீனவர்களுடைய குடும்பங்களுக்கு உதவுவதற்கான திட்டம் ஒன்றையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது அவர்களுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்களைக் களையத் தேவையான அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்படும்.
- ஆளுநர் உரையில் தமிழக அரசு.
கச்சத் தீவு கடற்பகுதியில் மீன் பிடி உரிமை உண்டா? இல்லையா?
“தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது அவர்களுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்களைக் களையத் தேவையான அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்படும்” என்று தமிழக சட்டப் பேரவையில் இன்று ஆளுநர் நிகழ்த்திய உரையில் கூறப்பட்டுள்ளது ஏதோ சம்பிரதாயமான வார்த்தைகளாகவே தெரிகிறது.
இப்படி கூறுவதற்குக் காரணம், கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை சிறிலங்க கடற்படையினர் பிடித்துச் (கடத்திச்) சென்று சிறைப்படுத்தியுள்ளனர் என்ற வேதனையான செய்தியே.
நமக்குச் சொந்தமான கச்சத் தீவை சிறிலங்காவிற்கு (நல்லெண்ண அடிப்படையில்) தாரை வார்த்துக் கொடுத்த நாள் முதல், கச்சத் தீவு கடற்பகுதியில் மீன் பிடி உரிமை இருந்தும் தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சிறிலங்க கடற்படையினரின் தாக்குதல்களுக்கு இதுவரை 300-க்கும் அதிகமான மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனைக் கண்டித்து தமிழக அரசின் சார்பில் மத்திய அரசிற்கு கடிதம் எழுதப்படுவதும், அயலுறவு அமைச்சகம் சிறிலங்க அரசிற்கு கடிதம் எழுதுவதும் அர்த்தமற்ற தொடர்கதையாகிவிட்டது. ஒரு வார காலத்திற்கு முன்னர் கூட மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு மீனவர் படுகாயமுற்று தற்பொழுது ராமநாதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மேலும் ஒரு அத்துமீறலாக, கச்சத் தீவு கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிறிலங்க கடற்படையினர், எல்லைத் தாண்டி வந்து அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறி பிடித்துச் சென்று சிறைபடுத்தியுள்ளது.
|