தமிழர்களின் தலையாய பண்டிகையான பொங்கலையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவரும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு விதித்த தடையை விலக்கிக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்திருப்பது சட்டத்தைக் கருவியாக்கி தமிழர் பண்பாட்டின் மீது நடத்தப்பட்ட அப்பட்டமான அத்துமீறல் ஆகும்.
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாகத் திகழும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டபோது, பார்வையாளர்களுக்கு உரிய பாதுகாப்புடனும், போட்டியாளர்கள் முறையான கட்டுப்பாட்டுடனும் அனுமதிக்கப்பட்டு நடத்தப்படும் என்று தமிழக அரசு அளித்த உறுதிமொழியை ஏற்ற நீதிமன்றம் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளித்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஜே.எம். பஞ்ஞால் ஆகியோர் கொண்ட நீதிமன்ற முதன்மை அமர்வு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவிற்கு விதித்த இடைக்காலத் தடையை விலக்கிக் கொள்ள மறுத்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தடை, தமிழர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, ஜல்லிக்கட்டு போட்டிகளை தாங்கள் வணங்கும் குல தெய்வத்திற்கு செலுத்தும் நன்றியாக கருதி அதில் ஈடுபட்டுவரும் தென் தமிழ்நாட்டு மக்களை ஆத்திரம் கொள்ளச் செய்துள்ளதால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை உருவாகும் அபாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. | | பாரம்பரியமாகவும், வீர மரபின் வெளிப்பாடாகவும் கருதும் ஒரு விளையாட்டைப் பற்றி தெரிவித்துள்ள “கருத்துக்கள்” தேவையற்றவை, தவிர்த்திருக்கக்கூடியவை |
| |
தமிழக மக்களின் கோபத்திற்குக் காரணம், தங்களது பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவும், பண்பாட்டின் அங்கமாகவும், அடையாளமாகவும் கருதி தாங்கள் உளப்பூர்வமாக ஈடுபட்டுவரும் வீர விளையாட்டை “காட்டுமிராண்டித்தனமானது, நாகரீகமற்றது” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் விமர்சித்திருப்பதே.
பாரம்பரியத்தை அவமதிக்கும் செயல்!
இந்திய நாட்டின் தலைமை நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அமர்ந்திருக்கும் ஒருவர், தமிழர்களின் பாரம்பரியமாகவும், வீர மரபின் வெளிப்பாடாகவும் கருதும் ஒரு விளையாட்டைப் பற்றி தெரிவித்துள்ள “கருத்துக்கள்” தேவையற்றவை, தவிர்த்திருக்கக்கூடியவை என்றெல்லாம் சொல்லி ஒதுக்கிவிடக்கூடியது அல்ல. ஏனென்றால், தமிழக அரசின் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் டி.ஆர். அந்தியர்ஜூனா, ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றியும், தமிழ்நாட்டு மக்களுக்கு அந்த விளையாட்டின் மீதுள்ள பற்றுணர்வையும் எடுத்துக் கூறியுள்ளார். அதனைக் கேட்டுக்கொண்ட பின்னர்தான் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கூறியுள்ளார்.
இப்படி விமர்சிப்பதற்கு அவருக்கு மட்டுமல்ல எவருக்கும் உரிமையில்லை. இது சட்டம் சார்ந்த பிரச்சனையல்ல, மாறாக தமிழரின் பண்பாட்டைத் தழுவியது. அவ்வாறு எடுத்துக் கூறப்பட்ட பின்னரும் அதனை உணராமல் கோப உணர்ச்சிக்கு ஆட்பட்டு இப்படிப்பட்ட வார்த்தைகளை உதிர்க்கிறார் என்றால், தான் வகிக்கும் பதவிக்குரிய பொறுப்புணர்வை தலைமை நீதிபதி இழந்துவிட்டார் என்பதையே அவரின் நடத்தைப் புலப்படுத்துகிறது.
|