இந்திய நாடே ஆவலுடன் எதிர்பார்த்த குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தேர்தல் கணிப்புகள் தோற்றுவித்த எதிர்பார்ப்புகளையெல்லாம் தாண்டி, முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு அருதிப் பெரும்பான்மையுடன் வெற்றியை அளித்துள்ளது.
காங்கிரஸிற்கும், மோடிக்கும் (அதாவது பாரதிய ஜனதா கட்சிக்கும்) இடையே கடும் போட்டி நிலவுகிறது என்றாலும் குறைந்த பட்ச பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என்றே கருத்துக் கணிப்புக்களும், வாக்கெடுப்பிற்குப் பின்னர் நடந்த வாக்காளர் கணிப்புக்களும் கூறின. ஆனால், எதிர்பார்த்ததிலும் எதிர்பாராததாக தேர்தல் முடிவுகள் அமைந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இத்தேர்தல் முடிவுகள் ஒரு சில எண்ணிக்கை மாற்றங்களைத் தவிர எல்லா விதத்திலும் 2002 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் முடிவுகளையே ஒத்துள்ளது.
2002 தேர்தலில் குஜராத் சட்டப்பேரவைக்கு மொத்தம் உள்ள 182 இடங்களில் பா.ஜ.க. 127 தொகுதிகளில் வென்று மோடி முதலமைச்சர் ஆனார். 2007 தேர்தலில் 10 இடங்கள் குறைவாக 117 இடங்களைக் கைப்பற்றி, முழு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார் முதலமைச்சர் நரேந்திர மோடி. 10 தொகுதிகளை இழந்தாலும், பா.ஜ.க. பெற்றுள்ள வாக்கு விழுக்காட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை!
அசைக்க முடியாத மோடியின் பலம்!
2002 தேர்தலில் பெற்ற அதே வாக்கு விகிதத்தை இப்பொழுதும் பா.ஜ.க. பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அப்போதும் 49 % , இப்போதும் 49 %
வாக்குப்பதிவு 2002 ஆம் ஆண்டை விட அதிகரித்தும், அதே வாக்கு விழுக்காட்டை மோடி பெற்றதே இந்த பெரும் வெற்றியை உறுதி செய்துள்ளது.
கடுமையான போட்டியைத் தந்ததாக கூறப்பட்ட காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்கு விழுக்காட்டிலும் மாற்றமில்லை. கடந்த தேர்தலில் பெற்ற அதே 39 % வாக்குகளையே இந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.
இதேபோல, மற்ற கட்சிகளும், சுயேச்சைகளும் பெற்ற வாக்குகளிலும் இதே நிலைதான் உள்ளது. ஆக, இந்தத் தேர்தல் முடிவுகள் 2002 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையே முழுவதுமாக பிரதிபலித்துள்ளது.
அப்படியானால் பா.ஜ.க.விற்கு 10 தொகுதிகள் குறைந்ததிற்கும், காங்கிரஸ் கட்சிக்கு (கூட்டணிக்கு) 11 தொகுதிகள் அதிகம் கிடைத்ததற்கும் காரணம்?
குஜராத் மாநிலத்தின் வாக்காளர்களின் போக்கைப் பிரதிபலித்திடும் 4 பெரும் பகுதிகளில், முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள மத்திய குஜராத்தில் பா.ஜ.க. இம்முறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. 2002 தேர்தலில் மத்திய குஜராத்திலுள்ள 43 தொகுதிகளில் பா.ஜ.க. 38 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. இதற்குக் காரணம் அந்த்த் தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.
இம்முறை முஸ்லிம் வாக்காளர்கள் மோடிக்கு எதிராக பெருமளவிற்கு வாக்களித்தனர். இதன் விளைவாக அங்குள்ள 43 தொகுதிகளில் 22 -ஐ காங்கிரஸ் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கடந்த முறை 38 தொகுதிகளை கைப்பற்றிய பா.ஜ.க.விற்கு இம்முறை 18 தொகுதிகள்தான் கிடைத்துள்ளது. அதாவது மத்திய குஜராத்தில் மட்டும் பா.ஜ.க. 20 தொகுதிகளை இழந்தது. காங்கிரஸ் 17 தொகுதிகளை அதிமாகப் பெற்றது.
மத்திய குஜராத்தில் 20 தொகுதிகளை இழந்தாலும், தெற்கு குஜராத்திலும், காங்கிரஸிற்கு சாதமானதாக்க் கருதப்பட்ட செளராஷ்ட்ரா, கட்ச் உள்ளிட்ட மேற்கு குஜராத்திலும், கணிப்பு, எதிர்பார்புகளையெல்லாம் தாண்டி தெற்கு, வடக்கு குஜராத்திலும் கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் பா.ஜ.க.விற்கு (மோடிக்கு) பெரு வெற்றி கிடைத்துள்ளது. அதனால்தான், மத்திய குஜராத்தில் ஏற்பட்ட இழப்பை (20 தொகுதிகள்) மற்ற பகுதிகளில் கூடுதலாக வென்று சிரம்மின்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் நரேந்திர மோடி.
|