ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கத்தை வென்று நமது நாட்டிற்குப் பெருமை சேர்த்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தியை பாலியல் திரிபு காரணங்களைக் கூறி நோகடித்தன் விளைவாக அவர் தற்கொலை செய்ய முயற்சித்தார் என்கின்ற செய்தி நமது நாட்டிற்கும், உலக ஒலிம்பிக் இயக்கத்திற்கும் அவமானமாகும்.
இயற்கையில் ஆண், பெண் என்பது மட்டுமின்றி, இப்படிப்பட்ட ஆணுமற்ற, பெண்ணுமற்ற எந்த பாலியலும் சாரா திரிபும் பிறப்பில் ஏற்படுவது தொன்றுதொட்டு நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தும், அதையே பெரிய காரணமாக்கி அவர்களுக்கு சமூக அடையாளமே தராமல் ஒதுக்கி வைக்கும் துயரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இது பிறவியிலேயே பாலியல் திரிபு எனும் பால்சாரா நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருந்தும், அதையெல்லாம் தாண்டி எந்தத் துறையில் அவர்கள் முன்னேற முயற்சித்தாலும் சமூகம் அவர்களை அதே குறையைக் காட்டி ஒதுக்கித் தள்ளிக்கொண்டே இருக்கிறது என்பதற்கு தடகள வீராங்கனை சாந்தியும் ஆளாக்கப்பட்டிருப்பது கொடுமையிலும், கொடுமையாகும்.
ஆசிய தடகள போட்டிக்குச் செல்லும் முன்பே அவருக்கு சோதனை நடத்தப்பட்டது. எல்லா தடகள வீரர், வீராங்கனைகளுக்கு பொதுவாக நடத்தப்படும் சோதனைகள் அனைத்திற்கும் சாந்தியும் உட்படுத்தப்பட்டார். ஆனால், அப்பொழுதெல்லாம் அவருடைய பாலியல் நிலை குறித்த எந்த சர்ச்சையும் எழவில்லை. ஆனால் போட்டியில் வென்றதற்குப் பிறகு நடத்தப்பட்ட சோதனையில் அவர் பாலியல் நிலை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை என்று கூறி அளிக்கப்பட்ட பதக்கத்தை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பும், அதற்கு எவ்வித எதிர்பபும் இன்றி இசைவளித்த இந்திய ஒலிம்பிக் சங்கமுமே சாந்தியை விரக்தியின் விளிம்பிற்கு தள்ளியுள்ளன.
சென்னையில் தடகள பயிற்சிக்காக சாந்தி வந்துவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பிய பின் இத்தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது, அவர் இங்கிருந்தபோது அவருடைய பாலியல் நிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மனம் புண்படக்கூடிய அளவிற்கு எவரும் அவரிடம் தவறாக நடந்து கொண்டிருப்பார்களோ என்கின்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
இப்பிரச்சனையில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது. ஒரு தடகள வீரர் அல்லது வீராங்கனை கடுமையான பயிற்சிக்குப் பிறகே ஆசிய அளவில் அல்லது ஒலிம்பிக் அளவில் பதக்கத்தை வெல்லும் அளவிற்கு திறனை வெளிப்படுத்த முடிகிறது. அவ்வாறு வெளிப்படுத்தப்பட்ட திறன், பாலியல் திரிபு கண்டுபிடிக்கப்பட்டதனால் எவ்வாறு தகுதியற்றதாக்கப்படுகிறது என்பதுதான் அந்தக் கேள்வி.
|