உர மானியம் நீக்கப்படுவதை இஃப்கோ உர நிறுவனம் வரவேற்றுள்ளதுடன், படிப்படியாக இதன் உரம் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். உரம் பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் மாசுபடுவதுடன், அந்நிய நாடுகளே பொருளாதார ரீதியாக பயன் அடைகின்றன என்று கூறியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி செவ்வாய்கிழமையன்று பொருளாதார பத்திரிக்கை ஆசிரியர்கள் மாநாட்டில் பேசும் போது, அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டுமெனில் திட்டம் சாரா செலவினங்களைக் குறைக்க வேண்டும். அதற்கு அரசுக்கு உள்ள வழிகளில் முக்கியமானது பெட்ரோலிய பொருட்கள், உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைப்பதாகும்.
இந்த நிதி ஆண்டில் உரத்துக்கு மட்டும் அரசு ரூ. 55 ஆயிரம் கோடி மானியமாக ஒதுக்கியுள்ளது என்று கூறியிருந்தார்.
இது குறித்து இந்தியாவின் பெரிய உர உற்பத்தி நிறுவனமான இஃப்கோ என்று அழைக்கப்படும் இந்தியன் பார்மர்ஸ் பெர்டிலைசர் கோவாபரேடிவ் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் உதய் சங்கர் அவாஸ்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், படிப்படியாக இதன் உரம் பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். உரம் பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் மாசுபடுவதுடன், அந்நிய நாடுகளே பொருளாதார ரீதியாக பயன் அடைகின்றன. மத்திய நிதி அமைச்சர் உரத்திற்கான மானியத்தை, உர தொழிற்சாலைகளுக்கு வழங்குவதற்கு பதிலாக, நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கலாம் என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்திய உர நிறுவனங்கள் கச்சாப் பொருட்களுக்காக மற்ற நாடுகளையே நம்பியுள்ளன. இதனால் உர தொழிற்சாலைகளுக்கு மானியம் வழங்குவதால், நாட்டின் வேளாண்-பொருளாதாரத்திற்கு எவ்வித பயனும் இல்லை என்று கூறினார்.
அதே நேரத்தில் பசுமை புரட்சியின் போது, அறிமுகப்படுத்திய இரசாயண உரத்தால் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளோம் என்பதை ஏற்றுக் கொண்டார். ஆனால் தற்போது இந்த நிலைமையில் இருந்து மாற வேண்டும் என்று கூறினார்.