தென் மேற்கு பருவமழை பல இடங்களில் பொய்த்து போனது. அதே நேரத்தில் பல பகுதிகளில் அளவுக்கு அதிகமாக பெய்து வெள்ளம் உண்டாக்கியது. இதனால் கரிப் பருவத்தில் நெல் உட்பட பல உணவு தானியங்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்று மத்திய வேளாண் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.
இந்த பருவத்தில் 151 லட்சத்து 30 ஆயிரம் டன் நெல் உற்பத்தி குறையும். 694 லட்சத்து 50 ஆயிரம் டன் மட்டுமே உற்பத்தியாகும் என முன்மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற கரிப் பருவத்தில் 845 லட்சத்து 80 ஆயிரம் டன் நெல் உற்பத்தியானது.
இதே போல் சிறு தானியங்கள் உற்பத்தி 227 லட்சத்து 60 ஆயிரம் டன்னாக குறையும் ( சென்ற கருப் பருவ உற்பத்தி 283 லட்சத்து 40 ஆயிரம் டன்).
பருப்பு வகைகள் உற்பத்தி 44 லட்சத்து 20 ஆயிரம் டன்னாக குறையும். ( சென்ற கருப் பருவ உற்பத்தி 47 லட்சத்து 80 ஆயிரம் டன்).
எண்ணெய் வித்து உற்பத்தி 152 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக குறையும். ( சென்ற கருப் பருவ உற்பத்தி 178 லட்சத்து 80 ஆயிரம் டன்).
இதில் மக்காச் சோளம் 126 லட்சத்து 10 ஆயிரம் டன். சோளம்-25 லட்சத்து 50 ஆயிரம் டன், பஜ்ரா 58 லட்சத்து 30 ஆயிரம் டன், துவரை 24 லட்சத்து 70 ஆயிரம் டன், உளுந்து 88 ஆயிரம் டன், பாசிப் பருப்பு 52 ஆயிரம் டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணெய் வித்துக்களில் சோயா மொச்சை 89 லட்சத்து 30 ஆயிரம் டன், நிலக்கடலை 45 லட்சத்து 30 ஆயிரம் டன் உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பருத்தி 236 லட்சத்து 60 ஆயிரம் பேல் ( 1 பேல்-170 கிலோ) உற்பத்தியாகும். சணல் 180 கிலோ கொண்ட 102 லட்சத்து 40 ஆயிரம் பேல் உற்பத்தியாகும்.
கரும்பு 2494 லட்சத்து 80 ஆயிரம் டன் உற்பத்தியாகும் என்று மத்திய வேளாண் அமைச்சகம் முன் மதிப்பீட்டில் தெரிவித்துள்ளது.