இந்தியா, சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பல முறை சென்று வருவதற்கு வசதியாக சிறப்பு விசா வழங்க இந்தியா, சவுதி அரேபியா நாடுகளின் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ரியாத்தில் இரு நாடுகளின் கூட்டுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தியா சார்பில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமை வகித்தார்.
சவுதி அரேபியா சார்பில் நாட்டு வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் அப்துல்லா ஜைனல் அலிரேஸ் தலைமை வகித்தார்.
இதில் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு, தொழிலாளர் விசா, சமூக நலம் ஆகியன குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
எண்ணெய், எரிவாயு, தாதுப் பொருள்கள், அறிவியல்- தொழில்நுட்பம் தவிர புதிய துறைகளான பொறியியல், விவசாயம், உயர் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. விசா பிரச்னைகள், தொழிலாளர் பிரச்னைகள் குறித்தும் பேசப்பட்டது.
இது குறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், கூட்டுக் கூட்டம் மிகுந்த பயனுள்ளதாகவும், இரு நாடுகளின் உறவை வலுப்படுத்துவதாகவும் இருந்தது என்று தெரிவித்தார்.
ரியாத்தில் பிரணாப் முகர்ஜி சவுதி அரேபிய அரசர் அப்துல்லா பின் அப்துல் அசீஸ் அல்-சொத்தையும் சந்தித்தார்.
இதற்கு முன் ரியாத்தில் இந்திய ஜவுளி கண்காட்சியை பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்தார்.