மிளகாய் வற்றல் விலை சீராக இருக்கும்: வேளாண் பல்கலை..

கோவை:, திங்கள், 2 நவம்பர் 2009( 12:05 IST )
மிளகாய் வற்றல் விலை சீராக இருக்கும் என்று கோவை பல்கலைகழகத்தின் உள்நாட்டு-ஏற்றுமதி சந்தை தகவல் மையத்தின் ஆய்வில் இருந்து தெரியவந்துள்ளது.
மிளகாய் வற்றல் விலை அடுத்து வரும் மாதங்களில் நிலையாக இருக்கும். வடகிழக்கு பருவ மழையை எதிர்நோக்கியுள்ள மிளகாய் விவசாயிகள், நவம்பரில் மிளகாய் விதைப்பு செய்தால் ஜனவரி, பிப்ரவரியில் நல்ல விலை கிடைக்குமா என்ற குழப்பத்துடன் உள்ளனர்.
இந்த ஆய்வு மிளகாய் சாகுபடி செய்யும் மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர், பரமக்குடி, பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் மிளகாய் வற்றல் உற்பத்தியில் ஆந்திரா (53 விழுக்காடு) முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒரிசா, தமிழகம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
ஜனவரி - மார்ச் மாதங்களில் சந்தைக்கு அதிக அளவு மிளகாய் வரத்து இருக்கும். இதனால் மிளகாய் வற்றல் விலை குறைய வாய்ப்பு உள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் வரத்து குறைவதால் விலை உயரும்.
தற்போது, விருதுநகர் சம்பா மிளகாய் வற்றல் விலை, குவிண்டாலுக்கு 4,250 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை உள்ளது. நவம்பர் 2009ல் விதைத்து ஜனவரியில் சந்தைக்கு வரும் மிளகாய் வற்றலின் விலையை நிர்ணயம் செய்ய, கடந்த 12 ஆண்டுகளாக விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மிளகாய் வற்றல் விலைகள் ஆய்வில் உட்படுத்தப்பட்டன.
அதன்படி ஜனவரி, பிப்ரவரி 2010ல், சம்பா மிளகாய் வற்றலின் விலை குவிண்டாலுக்கு 4,700 ரூபாய் முதல் 4,800 ரூபாய் வரை இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. மிளகாய்க்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகமாக இருப்பதால், தமிழகம், ஆந்திராவில் இருந்து சந்தைக்கு மிளகாய் விற்பனைக்கு வந்தாலும், இதன் விலை குறையாது.
எனவே, மிளகாய் விவசாயிகள் நல்ல விலை கிடைக்க, வடகிழக்கு பருவமழைக் காலத்தில் முறையான பயிர் மேலாண்மையை கடைபிடித்து, மிளகாய் வற்றல் சாகுபடி செய்யலாம். வடகிழக்கு பருவமழை சரியான அளவு இருந்தால் மட்டுமே இந்த விலை கிடைக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.