ஈரோடு : உற்பத்தி செலவைக் காட்டிலும் பருத்தி விலை குறைவால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு லட்சம் ஏக்கருக்கு மேல் பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பூதப்பாடி, சத்தியமங்கலம், பவானிசாகர், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பருத்தி நடவு செய்துள்ளனர். இந்த பருத்தி கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது விளைச்சல் குறைந்து காணப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒரு செடிக்கு நூறு முதல் நூற்றி பத்து காய்கள் வரை இருந்தது. தற்போது ஒரு செடிக்கு ஐம்பது முதல் அறுபது காய்கள் மட்டுமே பிடித்துள்ளது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் பருத்தி அறுவடை தொடங்கிவிட்டது.
கடந்த ஆண்டு சாராசரியாக ஒரு குவிண்டால் பருத்தி ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3500 வரை விற்பனையானது. நடப்பு ஆண்டில் இதே விலைக்கு விற்பனையானால் மட்டுமே பருத்தி விவசாயிகளுக்கு குறைந்த லாபமாவது கிடைக்கும் என்று பருத்தி விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் தற்போது ஈரோடு மாவட்டத்தில் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2350 முதல் ரூ.2710 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது. இது பருத்தி விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது.
அந்தியூர், பூதப்பாடி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஏலம் முறையில் பருத்தி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் அங்கேயும் பருத்திக்கு எதிர்பார்த்த விலை கிடைப்பதில்லை. இதனால் பருத்தி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
இது குறித்து பருத்தி விவசாயிகள் நமது செய்தியாளரிடம் கூறும்போது அரசு பருத்தி உற்பத்திக்கு விவசாயிகள் செய்துள்ள செலவை கணக்கிட்டு அதற்கு மேல் அவர்களுக்கு லாபம் கிடைக்குமாறு கணக்கிட்டு பருத்திக்கு விலை நிர்ணயம் செய்யவேண்டும். விவசாய பொருட்களை தவிர மற்ற பொருட்கள் அனைத்தும் கடந்த ஆண்டைவிட விலை கூடியுள்ளது. ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு மட்டுமே ஆண்டுதோறும் விலை குறைந்து வருகிறது என வேதனையுடன் கூறினர். |