பல்வேறு பொருட்களின் விலை உயர்வினால் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
பண்டங்களின் மொத்த விலைப்பட்டியலின் அடிப்படையில் பணவீக்க விகிதம் கணக்கிடப்படுகிறது. பணவீக்க கணக்கெடுப்பில் உருக்கு, இரும்பு பொருட்களின் விலைக்கு 29 விழுக்காடு மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் இவைகளின் விலை அதிகரித்தால், பணவீக்க விகிதம் தானாகவே உயரும்.
இதை கருத்தல் கொண்டு பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், பல்வேறு தொழில்கள் பாதிக்காமல் இருக்கவும், உருக்கு, இரும்பு பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசு ஏற்றுமதி வரி அதிகரிப்பு, இறக்குமதி வரி குறைப்பு, சரக்கு கட்டணம் குறைப்பு உட்பட பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டது.
இதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது போல் தெரிகிறது.
இன்று புது டெல்லியில் உருக்கு துறை செயலாளர் ராகவ் சரண் பாண்டேயை உருக்கு ஆலை உயர் அதிகாரிகள் சந்தித்து பேசினர். இந்த சநதிற்கு பிறகு, உருக்கு ஆலையின் மூத்த அதிகாரி ஒருவர், உருக்கு தகடு விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வரை குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.
இன்று உருக்கு துறை செயலாளர் ராகவ் சரன் பாண்டேயை, டாடா ஸ்டீல் மேலாண்மை இயக்குநர் பி.முத்துராமன், ஜி.எஸ்.டபிள்யூ. துணைத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான சாஜன் ஜிந்தால், பொதுத்துறை நிறுவனமான செயில் சேர்மன் சுசில் குமார் ரோங்டா, இஸ்பாட் இன்டஸ்டிரிஸ் மேலாண்மை இயக்குநர் வினோத் குமார் மிட்டல், எஸ்ஸார் ஸ்டீல் தலைவர் சுசி ரூயா ஆகியோர் உட்பட, உயர் அதிகாரிகள் சந்தித்து பேசினார்கள்.
இந்தியாவில் உள்ள உருக்கு ஆலைகள் ஒன்று சேர்நது இந்தின் ஸ்டீல் அலையன்ஸ் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பு மூலம் உருக்கு ஆலைகள் கூட்டு சேர்ந்து உருக்கு, இரும்பு பொருட்களின் விலையை உயர்த்துவதாக குற்றம் சாட்டப்பட்டது.
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சிமெண்ட், உருக்கு ஆலைகள் கூட்டணி அமைத்துக் கொண்டு, இவற்றின் விலையை செயற்கையாக உயர்த்துவதாக நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இவ்வாறு பல்வேறு தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பை அடுத்து சென்ற வாரம் நாட்டின் முன்னணி உருக்கு உற்பத்தி நிறுவனமும், பொதுத்துறை நிறுவனமுமான செயில் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய உருக்கு ஆணையம், இநத அமைப்பில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
|