டில்லியில் ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் வீட்டு மனை, குடியிருப்புகளை வாங்குபவர்கள் ஏமாற்றப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
அரசு அங்கீகாரம் பெறாத வீட்டு மனை, காலி மனைகளை விற்பனை செய்வது, அரசிடம் அனுமதி பெற்றதற்கு மேல் பல மாடிகளை கட்டுவது போன்ற, விதிமுறைகளின் படி காலி இடம் விடாமல் இருப்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
அத்துடன் பல ஊர்களில் ஒரே காலி மனையை பலருக்கு விற்பனை செய்வது, மனை அல்லது வீட்டின் சொந்தக்காரருக்கே தெரியாமல் அடுத்தவர்களுக்கு விற்பனை செய்வது, போலி பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்வது, பவர் ஆப் அட்டர்னி எனப்படும் அதிகார பத்திரத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்வது போன்ற முறைகேடுகள் ரியல் எஸ்டேட் தொழிலில் நடந்து வருகின்றன.
இதனால் பல அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இந்த வகையான மோசடி பற்றி காவல் துறையில் புகார்களும், நீதி மன்றங்களில் வழக்குகளும் தினந்தோறும் குவிகின்றன.
இத்துடன், குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்யும் கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை பெருநகர வளர்ச்சி ஆணையம், நகராட்சிகள் போன்ற சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் கட்டி விற்பனை செய்கின்றனர். இதனால் வீட்டை வாங்கியவர்கள் பல்வேறு விதங்களில் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
இவற்றை முறைப்படுத்தி, பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகாமல் பாதுகாக்கும் வகையில் ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறைகளை முறைப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
ரியல் எஸ்டேட், குடியிருப்பு, அலுவலக கட்டுமான நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்புக்கள் இல்லை. அத்துடன் ரியல் எஸ்டேட் துறையில் முன்பு சிறிய அளவு நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தன.
|