தென் மேற்கு பருவமழை வழக்கமாக தொடங்குவதற்கு முன்னரே தொடங்கியுள்ளதால் நெல் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி கேரள மாநிலத்தில் தொடங்கும். இந்த வருடம் முன்னரே மழை பெய்யத் துவங்கியது.
அத்துடன் மற்ற மாநிலங்களிலும் முன்னரே பருவமழை பெய்ய துவங்கியது. தலைநகர் டெல்லியில் வழக்கமாக பருவமழை ஆரம்பிக்கும் நாளுக்கு, இரண்டு வாரம் முன்னரே மழை பெய்ய துவங்கியுள்ளது.
ஜூன் மாதத்தில் முதல் இரண்டு வாரத்தில் சராசரி மழை அளவைவிட 40 விழுக்காடு அதிகமாக பெய்துள்ளது. இதனால் நெல் போன்ற உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
ஜூன் மாதம் முதல் செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் பெய்யும் தென் மேற்கு பருவமழை காலத்தில் விவசாயிகள் நெல், சோயா, நிலக்கடலை ஆகியவற்றை அதிக அளவு பயிரிடுகின்றனர்.
ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கும் மழை, ஜூலை மாதத்திற்குள் நாடு முழுவதும் பரவலாக பெய்ய துவங்கிவிடும். இது விவசாயத்திற்கு தேவையான நீர் பாசன தேவையை நிறைவேற்றுகிறது. இந்த பருவத்தில் உற்பத்தியாகும் உணவு தானிய உற்பத்தி, நாட்டின் மொத்த பொருள் உற்பத்தியில் 17 விழுக்காடு பங்கு வகிக்கிறது. இதனால்தான் தென் மேற்கு பருவமழை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
ஜூன் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இது சராசரி அளவை விட 44 விழுக்காடு அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் ராஜஸ்தானில் சில பகுதிகளில் மட்டும் மழை பெய்யவில்லை என்று கூறியுள்ளது.
|