புவி வெப்பமடைதலால் ஏற்பட்டு வரும் வானிலை மற்றும் பருவ மாற்றத்திற்குத் தக்கவாறு பயிர் சாகுபடி முறைகளையும் மாற்றிக்கொள்ளும் ஆளுமையை விவசாயிகள் பெற வழிவகுக்க வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கூறினார்.
சென்னை தரமணியிலுள்ள தனது ஆராய்ச்சி மையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஞ்ஞானி சுவாமிநாதன், வானிலை மாற்றம் தொடர்பான அறிதலை பஞ்சாயத்து அளவில் கற்பித்து, அந்த மாற்றத்திற்குத் தக்கவாறு பயிர் சாகுபடி செய்யும் திறனை விவசாயிகள் பெறுவது ஒன்றே, புவி வெப்பமடைதலால் ஏற்பட்டுள்ள சவாலை சந்திக்க ஒரே வழி என்று கூறினார்.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை சராசரி அளவிற்குப் பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டி, “இதனை மிகச் சரியாக பயன்படுத்தி அதிகபட்ச உற்பத்தியை பெருக்க வேண்டும்” என்று கூறிய சுவாமிநாதன், எதிர்பார்த்த அளவிலான உற்பத்திக்கும், கிடைத்த உற்பத்திக்கும் இடையிலான வித்தியாசத்தை குறைக்கும் ஆளுமையை உருவாக்க வேண்டியது அவசியம் என்றார்.
தற்பொழுது ஏற்பட்டுவரும் வானிலை மாற்றங்களால் உணவு உற்பத்திக்கும், பாதுகாப்பிற்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை ஒரு சவாலாக ஏற்று உணவு உற்பத்தியை - சுற்றுச் சூழலையும் காத்து - தக்கவைக்கும் சிறப்புத் திட்டத்தை தீட்டி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறிய சுவாமிநாதன், 1960களில் ஏற்பட்ட உணவுப் பஞ்சம் மற்றும் பற்றாக்குறையை சமாளிக்க மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக உருவான பசுமைப் புரட்சித் திட்டம் நமது நாட்டிற்கு உணவுத் தன்னிறைவை அளித்ததைச் சுட்டிக்காட்டினார்.
“இன்று உருவாகியுள்ள இந்த அச்சுறுத்தலை ஒரு சவாலாக ஏற்று நிரந்தர பசுமைப் புரட்சித் திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் உணவு உற்பத்திப் பெருக்கத்தை தொடர்ச்சியாக உறுதி செய்யவேண்டும்” என்றார்.
“நமது நாட்டின் மக்கள் தொகை 2020ஆம் ஆண்டில் 130 கோடியாக உயரும் என்ற நிலையில், நமது நாட்டிலுள்ள கால்நடைகளின் எண்ணிக்கையும் 20 விழுக்காடு அதிகரிக்கவுள்ளதால், அவைகளுக்கான தீவன உற்பத்தி பெருக்க வேண்டிய நெருக்கடியும் உள்ளது” என்ற சுவாமிநாதன், அரிசி, கோதுமை உற்பத்திக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள இச்சூழலில், கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்கி உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்றார்.
|