வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 12 ஜூன் 2019 (20:07 IST)

அமெரிக்கர்களுக்கே விபூதி அடித்த இந்திய கொள்ளையர்கள் - நூதன கொள்ளை அம்பலம்

இந்தியாவில் இருந்து கொண்டே பல லட்சம் அமெரிக்கர்களை ப்ளாக்மெயில் செய்து கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மத்திய பிரதேசத்தில் உள்ள பிரபல கால் செண்டரில் பணிபுரிந்தவர்கள் ஜாவத், ஷாரூக், பவால் மற்றும் ரஹீல். இவர்கள் கால் செண்டரில் பணி புரிந்தவாறே அதில் தொடர்பு கொள்ளும் அமெரிக்க வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடியுள்ளனர். அதை வைத்து அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகள் போல பேசி “உங்கள் மேல் கடத்தல் வழக்கு இருக்கிறது, போதைபொருள் பயன்படுத்திய வழக்கு இருக்கிறது. அதை நாங்கள் கண்டுகொள்ளாமல் விட வேண்டுமானால் எங்களுக்கு பணம் தர வேண்டும்” என மிரட்டியுள்ளனர். கிட்டதட்ட 10 ஆயிரம் அமெரிக்கர்களிடம் இதுபோல போனில் பேசி மிரட்டி பணம் பறித்துள்ளதாக தெரிகிறது.

இதை இவர்கள் தனியாக செய்யவில்லை. இதற்காக பெரிய நெட்வொர்க்கே இயங்கியிருக்கிறது. நாகலாந்து, மேகலாயா போன்ற பிற மாநில கால் சென்டரில் உள்ளவர்களும் இவர்களோடு இணைந்து இந்த மோசடி சம்பவத்தை செய்துள்ளனர். மொத்தமாக கைது செய்யப்பட்ட 78 பேரில் 75 பேர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். முக்கிய கைதிகளான ஜாவத், ஷாரூக், பவாலிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இரண்டு முக்கிய குற்றவாளிகளான ரஹீல் மற்றும் சன்னி சஹான் தலைமறைவாகியுள்ளனர்.

இவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கர்களின் தகவல்களை இவர்கள் திருடி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.