பல குடும்பத் தலைவிகள் நளபாகத்தில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கும், சரி, சமையல் என்றால் ஏதோ தெரிந்ததை செய்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் சரி, இந்திய, சீன, இத்தாலிய உணவு வகைகளை எவ்வாறு சமைப்பது என்பது குறித்து பயிற்சு கொடுக்க தமிழ்நாடு சுற்றுலாத் துறை திட்டமிட்டுள்ளது.
இது குறித்து சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய சுற்றுலாத் துறையால் தேசிய அளவில் உருவாக்கப்பட்ட ``உணவக மேலாண்மை, சமையல் கலை மற்றும் ஊட்டநெறி தொழில்நுட்ப கல்லூரி, சென்னை தரமணியில் தமிழக அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இங்கு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, சான்றிதழ் படிப்பு ஆகிய நிலைகளில் விருந்தோம்பல், உணவு விடுதி நிர்வாகம் போன்றவைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு உணவக மேலாண்மை மற்றும் விருந்தோம்பல் துறைக்கு தேவையான பணிவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் வாயிலாக, குடும்ப தலைவியருக்கு, இந்திய, இத்தாலிய, சீன நாட்டின் சைவ-அசைவ உணவு வகைகளை தயாரித்தல், பேக்கரி-தின்பண்ட வகைகளை தயாரித்தல், உணவு வகைகளை பரிமாறுதல், மேஜை வடிவமைப்பு-மலர் அலங்காரங்கள் செய்தல் ஆகியவற்றில் 2 வாரங்களுக்கான பயிற்சி வகுப்பு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பு வருகிற, டிசம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 2 மணி முதல் 5 மணி வரை 10 நாட்கள் நடத்தப்படவுள்ளது.
இந்த வகுப்புகளில் குடும்ப தலைவியருக்கு பல்வேறு உணவு வகைகள் குறித்த செயல்முறைகள் நிகழ்த்திக் காட்டப்படும். அது குறித்த குறிப்பேடுகளும் வழங்கப்படும். இப்பயிற்சிக்கென ஒரு நபருக்கு குறைந்த கட்டணமாக ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்படும். குடும்ப தலைவியரும், இளம்பெண்களும் தங்கள் சமையல் கலைத்திறனையும், பணிநுட்பங்களையும் மேம்படுத்தி கொள்ளலாம்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளோர், சென்னை தரமணியில் அமைந்துள்ள உணவக மேலாண்மை, சமையல் கலை மற்றும் ஊட்டநெறி தொழில்நுட்பக் கல்லூரி, முதல்வரை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது (தொலைபேசி-22542029, 22541262 என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.