தமிழக மக்கள் ஆடம்பரமாக, ஆர்ப்பாட்டமாக கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளி முக்கியமானது ஆகும். பட்டு ஆடைகள், இனிப்பு வகைகள், பல்வேறு ரக பட்டாசுகள் ஆகியவை தீபாவளி பண்டிகையில் கண்டிப்பாக இடம்பெறும். ஒரு மாதத்திற்கு முன்னரே ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதும்.
அதுபோல இந்த ஆண்டும் தீபாவளியையொட்டி ஜவுளிக் கடைகளில் கூட்டத்திற்கு குறைவில்லை. ஆனால், இல்லத்தரசிகளும், இளம் பெண்களும் விலை உயர்ந்த பட்டுப் புடவைகள், பட்டு சுடிதார்களை வாங்குவதற்குப் பதிலாக சற்று விலை குறைந்த காட்டன் சேலைகள், காட்டன் சுடிதார்களை அதிகம் வாங்கினார்கள்.
மேலும், பருத்தி ஆடைகளை எந்த நாளிலும் சாதாரணமாக அணியலாம். சென்னையில் 12 மாதங்களில் 10 மாதம் வெயில் கொளுத்துகிறது. சென்னைக்கு பருத்தி ஆடைகள்தான் சிறந்தது. காட்டன் சேலைகளை, சுடிதார்களை விரும்பி அணிவதற்கு இவைதான் காரணம் என்கின்றனர் பெண்கள்.
வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டுமல்ல, வீட்டிலிருக்கும் பெண்களும் பருத்தி ஆடைகளையே விரும்பு அணிகின்றனர். ஒரேயொரு பட்டு சுடிதார் வாங்கும் செலவில் 4 காட்டன் சுடிதார் எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.