கணவர் தன்னைச் சுற்றி சுற்றி வர வேண்டும் என்று எல்லா மனைவிகளுமே எண்ணுகின்றனர். ஆனால் அவ்வாறு எல்லா வீடுகளிலும் நடப்பதில்லையே?
துரத்தி துரத்தி காதலித்த காதலர்கள் கூட கணவர் அந்தஸ்தைப் பெற்றவுடன் மனைவியை மறந்து வெளி உலகத்திலேயே மூழ்கி இருக்கின்றனர்.
வேலை, விளையாட்டு, நண்பர்கள், பொழுதுபோக்கு என அவர்களது பார்வை வேறு பக்கம் இருக்கும்போது மனைவிக்கு லேசான தலைவலி வருவது சகஜம்தான். ஆனால் அதற்காக நீங்கள் கையாள வேண்டிய விஷயம்தான் முக்கியம்.
பொதுவாக ஆண்கள் விளையாட்டு, பொழுதுபோக்கு என்று வெளியே நேரத்தை செலவிட்டு வருவதற்குக் காரணம் குடும்ப நச்சரிப்புதான் என்று கூறப்படுகிறது.
எனவே பெண்கள் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் கணவரிடம் அது இல்லை, இது வேண்டும், அந்த பிரச்சினை, இவருடன் சண்டை என்று அவர் மீது கனத்தை ஏற்ற வேண்டாம்.எதையும் பக்குவமாக தேவைப்படும்போது மட்டும் சொல்லிப் பழகுங்கள்.
வீட்டில் நடந்தவற்றை அல்லது அலுவலகத்தில் நடந்த பிரச்சினைகளை எல்லாம் தாங்களாகவே ஒப்புவிக்கும் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள்.
நீங்கள் எல்லா வற்றையும் கூறிவிடும்போது உங்களிடம் எந்த ஒரு எதிர்பார்ப்பும், ஆவலும் இல்லாமல் போய்விடுகிறது.
அதனால் ஒரு சில துணுக்குகளை மட்டும் கொடுத்துவிட்டு அவரை ஆவலுக்குட்படுத்துங்கள். அதாவது இன்றைக்கு என் உயர் அதிகாரியிடம் பேசினேன் என்பதை மட்டும் சொல்லிவிட்டு இருந்துவிடுங்கள்.
சிறிது நேரத்திற்குப் பின் என்னதான் பேசினாய் என்று உங்களது கணவர் உங்களிடம் ஆவலாய் கேள்வி எழுப்பும் வரை மீதியை ரகசியம் காத்திடுங்கள்.
சமையல்... இதற்கு அடிமையாகாத ஆண்களே இருக்க மாட்டார்கள். அவருக்குப் பிடித்தமான உணவு வகைகளை சமைத்து அன்புடன் பரிமாறுங்கள். உடனடியாக எந்த மாற்றமும் தெரியாது. ஆனால் போக போக உங்கள் வழிக்கு வருவதை உணருவீர்கள்.
டிவி பார்ப்பது, நண்பர்களுடன் அரட்டை போன்ற விஷயங்களில் நீங்களும் அவருடன் சேர்ந்து கொள்ளுங்கள். அவருடன் சேர்ந்து அவர் பார்க்கும் நிகழ்ச்சியை ரசிக்க முயற்சியுங்கள் (முடியாதுதான், ரசிப்பது போல் நடிக்கவாவது செய்யுங்கள்.) அவருடன் சேர்ந்து நிகழ்ச்சியை ரசிக்கும் உங்கள் மீதும் அவரது ரசனை திரும்பலாமே... வாய்ப்பிருக்கிறது.
திருமணமான பல பெண்கள் தங்களது ஆரோக்கியம் மற்றும் அழகில் அக்கறை இல்லாமல் இருப்பதும் கணவரின் கண்டுகொள்ளாமைக்குக் காரணமாகிறது. இதை நீங்கள் நினைத்தால் மாற்றிக்காட்டலாம். ஒவ்வொரு பெண்ணும் தங்களது அழகின் மீதும், ஆரோக்கியத்தின் மீதும் ஒரு கண் அல்ல இரண்டு கண்களையும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
சின்ன சின்ன அலங்காரங்கள் செய்து உங்களை நீங்களே அழகாக்கிக் கொள்ளுங்கள். துவக்கத்தில் தெரியாதவர்கள் கூட நாட்கள் செல்ல செல்ல பெரிய அனுபவசாலியாகி விடுவீர்கள். எனவே அழகுக்கு அக்கறை செலுத்துங்கள்.
அதற்காக பல மணி நேரங்கள் அழகு நிலையங்களில் அமர்ந்திருக்க வேண்டியதில்லை. அழகான ஆடைகளை, அதற்கேற்ற வண்ணத்தில் வளையல் பொட்டு என அவரவர்கேற்ற வகையில் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
எப்படி செய்தும் உங்கள் கணவர் உங்களைக் கண்டுகொள்ளவில்லையா?
நீங்களும் அவரைப் போல கணவர் மீது எந்த நாட்டமும் இல்லாதது போல் இருந்துவிடுங்கள். வேறு ஏதாவது ஒன்றின் மீது அக்கறை காட்டுவது போல் செய்து பாருங்கள். அவர் தானாகவே வழிக்கு வருவார்.
இதுபோல் நீங்கள் செய்த தந்திரங்களையும் எங்களுக்கு அனுப்பலாம்.
நீங்களும் உங்களது அனுபவங்களை எழுதுங்கள்.
|