பெண்கள் பொதுவாக எல்லாவற்றையுமே தனது கணவனிடம் சொல்லிவிடுவார்கள். எல்லாவற்றையுமே சொல்லிவிடுவதால்தான் பல பிரச்சினைகள் வருகின்றன என்பது வேறு கதை.
ஆனால் ஆண்கள் அவ்வாறு இல்லை. பெண்களுக்கு இதெல்லாம் தெரியக்கூடாது, தெரிந்தால் வேதனைப் படுவார்கள், குழப்பிக் கொள்வார்கள் என்று எண்ணி பலவற்றை மறைத்து விடுவார்கள். இதில் தவறும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.
ஆதி காலத்தில் பெண்களின் மனது ஆழம், அவர்களைப் புரிந்து கொள்ள முடியாது என்றெல்லாம் கூறிய கதையெல்லாம் மலையேறிப் போய்விட்டது.
இந்த காலத்தில் ஆண்களின் மனதில் இருப்பதைத்தான் கண்டறிய முடிவதில்லை. அதனை அறிய எத்தனைப் பெண்கள் தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றனர் என்று அவர்களுக்குத் தான் தெரியும்.
ஆண்களின் சில நடவடிக்கைகளும், அதன் மூல காரணத்தையும் ஏதோ கொஞ்சம் கண்டுபிடித்து உங்களுக்காக தொகுத்துள்ளோம். அது சரியா தவறா என்று நீங்களே சிந்தித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். பொதுவாக ஆண்கள் மனைவியைவிட மற்ற பெண்களை அதிகமாக ரசிப்பதுண்டு. அதற்காக மனைவியை விட்டு கணவர்கள் பிரிந்து செல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களின் ரசனையை அறிந்து கொள்ள வேண்டும்.
விளையாட்டில் அதிகம் அக்கறைக் காட்டுவது மனைவி மற்றும் குடும்ப நச்சரிப்புகளில் இருந்து விலகிச் செல்வதற்கான வழிமுறையாகக் கூட இருக்கலாம். விளையாட்டின் மீதான அதீத அக்கறையை உங்கள் மீது திருப்பிக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.
மனைவிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்காக எல்லாம் கணவன்மார்கள் கொஞ்சம் கூட கவலைப்படுவதே கிடையாது. வாக்குறுதிகள் நினைவிருந்தால்தானே கவலைப்படுவதற்கு.
சம்பாதித்து கொடுப்பது மிக முக்கியக் கடமை என்று எண்ணுகின்றனர். ஆனால் அதனை மனைவி எந்த வகையில் செலவு செய்தாலும் மனதுக்குள் வேதனைப் படுவதும் அவர்கள்தான்.
தினமும் வீட்டில் சண்டை போட்டாலும் வீட்டைச் சுற்றி சுற்றி வருவதில்தான் கணவன்மார்களுக்கு மகிழ்ச்சி அதிகம். தனது மனைவியை எந்த இடத்திலும் மனதார விட்டுக் கொடுக்க மாட்டார்கள் ஆண்கள்.
கணவர்களைப் பொறுத்தமட்டில் மனைவிகள் தங்களுக்கு தாயாக இருப்பதை பெரிதும் விரும்புகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கணவன்மார்கள் தங்கள் மனைவியரை இன்னும் கூடுதலாக நேசிக்கின்றனர். ஆனால் அதனை மனைவியிடம் சொல்வதே கிடையாது.
மனைவிகள் என்ன பேசுகின்றார்கள் என்பது பெரும்பாலான கணவர்களுக்கு புரிவதே இல்லை. இருந்தாலும் ரசித்தபடி தலையாட்டிக் கொண்டிருப்பார்கள்.
மனைவிகள் வாகனம் ஓட்டும்போது கணவன்மார்கள் மிகவும் பதறித்தான் போகின்றனர். ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்வதில்லை
இளமை மீண்டும் திரும்ப வேண்டும் என்பதில் கணவன்மார்களுக்கு அலாதி பிரியம் உண்டு. எனவே வயதாக ஆகத்தான் தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்கின்றனர். அதை நீங்கள் சந்தேகிக்கக் கூடாது
கணவன்மார்களுக்கு ஒரு இஞ்ச் இடம் கொடுக்கும் மனைவிகளுக்கு தங்கள் வாழ்க்கை முழுவதையுமே கொடுப்பார்கள் கணவன்மார்கள்.
தற்போதெல்லாம் திருமணமான பெண்களை விட, ஆண்களே தங்களது பெற்றோரை முற்றிலுமாகத் துறந்து மனைவிதான் கதி என்று வாழ்கின்றனர் மனதிற்குள் குமுங்கியபடி, அதை பெண்கள் நினைத்தால் மாற்றலாமே.
பெண்கள் தங்களது கணவரின் குணத்தை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டால் பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
மகளிரே... நல்ல மனைவி என்ற மகுடம் சூடுங்கள்!
|