போற்றி போற்றி! ஓர் ஆயிரம் போற்றி! நின் பொன்ன டிக்குப்பல் லாயிரம் பேற்றிகாண்! சேற்றி லேபுதி தாக முளைத்ததோர் செய்ய தாமரைத் தேமலர் போலொளி தோற்றி நின்றனை பாரத நாட்டிலே; துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை, மாதர சே! எங்கள் சாதி செய்த தவப்பயன் வாரி நீ! மாதர்க் குண்டு சுதந்திரம் என்று நின் வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல் நாதந் தானது நாரதர் வீணையோ? நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லிம்பமோ? வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதோ? சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமோ? தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே! அறிவு கொண்ட மனித வுயிர்களை அடிமை யாக்க முயல்பவர் பித்தராம்; நெறிகள் யாவினு மேம்பட்டு மானிடம் நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே, சிறிய தொண்டுகள் தீர்த்ததடி மைச்சுருள் தீயி லிட்டுப் போசுக்கிட வேண்டுமாம்; நறிய பொன்மலர் மென்சிறு வாயினால் நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!
ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்; பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்; நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்; ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்; பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!
நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்; நீசத் தொண்டும் மடமையும் கொண்டதாய் தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல் சால வேயரி தாவதோர் செய்தியாம்; குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்; கொடுமை செய்தும் அறிவை யழித்துமந் நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்; நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ!
|