கண்ணாடியில் ஒவியம்
ஸ்டெயிண்டு கிளாஸ் பெயிண்டிங் என்ற கண்ணாடி ஒவியங்கள் இப்போது பிரபலமடைந்து வருகின்றன. கண்ணாடிக் கதவுகள், ஜன்னல்கள் என்று எங்கெல்லாம் கண்ணாடிக் கதவுகளைப் பயன்படுத்துகிறோமோ அங்கெல்லாம் இந்தக் கண்ணாடி ஒவியங்களை வரையலாம். எளிதான முறையில வரையலாம்.
ஒவியங்களை வரைந்து நன்கு காய்ந்த பின்பு சட்டங்களில் பொருத்தி ஜன்னலையோ கதவுகளையோ பொருத்த வேண்டும். கதவைப் பொருத்திய நிலையில் வண்ணங்களை கொடுத்தால் வண்ணங்கள் கீழ்நோக்கிப் பாய்ந்துவிடும் என்பதால் மேற்கூறிய முறை பின்பற்றப்படுகிறது.
இவ்வகை ஒவியங்களுக்கு சாதாரணக் கண்ணாடிகளைவிட (Plain Glass), ஸ்டயிண்டு கிளாஸ் என்ற வகையான கண்ணாடிகள் தான் பொருத்தமானவை. Frosted Glass (பனிமூட்டம் சூழ்ந்தது போன்ற கண்ணாடிகள் - அடுத்த பக்கத்திலிருப்பவை தெரியாது) என்ற வகைக் கண்ணாடிகளிலும் வண்ணங்கள் மிகவும் எடுப்பாகத் தெரிகின்றன. இவ்வகைக் கண்ணாடிகள் ஹார்டுவேர் (Hardware) கடைகளில் மற்றும் கண்ணாடிகள் விற்கும் கடைகளில் கிடைகின்றன. தேவையான அளவிற்கு தகுந்தாற் போல் வெட்டித் தருவார்கள். பிரேம் செய்து சுவர்களிலும் மாட்டலாம்.
தேவையான பொருட்கள்
1. 12" x 12" அளவுள்ள ஸ்டெயிண்டு (அ) பிராஸ்டட் கண்ணாடி - 4 மி.மீ. கனமுள்ளது. பலவித டிசைன்களில் கிடைக்கின்றன.
2. கண்ணாடி ஓவியங்களுக்கான வண்ணங்கள் கேமல், கோல்மன், பெவிக்ரைல் வண்ணங்கள் ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கும்.
3. ஒவியத்திற்கான டிசைன்கள்.
செய்முறை விளக்கம்
1. ஓவியத்திற்கான கண்ணாடியைத் தேர்ந்தெடுத்த பின் அதை சோப்பு கலந்த நீரால் நன்கு கழுவி, காய வைக்க வேண்டும்.
2. டிசைன் உள்ள காகிதத்தை மேஜையின் மேல் வைத்து, ஸ்டெயிண்டு கண்ணாடியில் கரகரப்பாக உள்ள பக்கம் டிசைன் உள்ள காகிதத்தின் மீது இருக்கும்படியும், வழவழப்பான பக்கம் மேலாக இருக்கும்படி அசையாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.
3. சமமான நிலையில் உள்ள பலகை அல்லது மேஜை மீது வைத்துத் தான் இவ்வகை ஓவியங்களை வண்ணம் தீட்ட வேண்டும்.
4. தோர்ந்தெடுத்த ஓவியத்தின் (design) எல்லைக் கோடுகளை, வளைவுகளை, அவுட்லைனர் எனப்படும் கறுமை நிற டியூப்-ஐ பயன்படுத்தி கண்ணாடியின் மேற்புறம் வரைந்துக் கொள்ள வேண்டும். (கண்ணாடியாதலால் டிசைன் மேற்புறம் நன்றாகத் தெரியும்).
5. ஓவியம் முழுவதிற்குமான எல்லைகளை வரைந்து விட்டதால், உட்புறங்களை தேவையான வண்ணங்களைக் கொண்டு நிதானமாக நிரப்ப வேண்டும். காற்றுக் குமிழ்கள் வரக்கூடும். அவற்றை உடனே உடைத்து விட வேண்டும்.
6. வண்ணங்களைத் தீட்டிய பின்பு ஓவியத்தை அசைக்காமல் 24 மணி நேரம் அப்படியே காய விட வேண்டும். நகர்த்தவும் முயல வேண்டாம்.
7. தூசியை அகற்றுவது நல்லது. நன்கு காய்ந்த பின்பு ஃபிரேம் செய்து சுவற்றில் மாட்டலாம்.
8. சூரிய வெளிச்சம் நேராக விழும்படியான இடங்களில் இவ்வகை ஓவியங்களை வைக்க வேண்டாம். அவ்வப்போது, உலர்ந்த மிருதுவான துணியால் படிந்துள்ள தூசியை அகற்றுவது நல்லது.
|