புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளைவிட தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் அறிவுத்திறன் (IQ) வளர்ச்சி வேகமாக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
குழந்தைகளுக்குத் தாய்ப்பால் நல்லதா? புட்டிப்பால் நல்லதா? என்று லண்டனில் உள்ள தேசிய அறிவியல் கழகத்தின் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.
முதலில் நியூஸிலாந்தில் பிறந்த 1,037 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களை இரு பிரிவாகப் பிரித்து 7, 9, 11, 13 ஆகிய வயதுகளில் அறிவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டது. பின்னர் அவர்கள் 18 வயதை அடைந்தபோது மரபணு மாதிரி(DNA Sample) பெறப்பட்டது.
இரண்டாவதாக, பிரிட்டனில் பிறந்த 2,232 இரட்டைக் குழந்தைகள் ஆய்வுக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டு 5-வது வயதில் மட்டும் அறிவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டது.
இந்த இரண்டு ஆய்வுகளிலும் தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் அறிவுத்திறன் வளர்ச்சி மற்றவர்களை விட 7 புள்ளிகள் வரை அதிகமாக இருந்தது தெரியவந்தது.
குழந்தைகள் வளர்ந்த சமூகச் சூழலைக் கணக்கிட்டாலும் கூட அவர்களின் அறிவுத்திறன் வியப்பளித்தது. அவர்கள் தங்களின் பெற்றோரிடமிருந்து குறிப்பிட்ட மரபணுவின் வளர்ச்சிக் காரணியைப் பெற்றிருந்தனர்.
அந்தக் காரணியைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்ட ஆய்வாளர்களுக்கு வெற்றி கிடைத்தது. தாய்ப்பாலில் உள்ள சிறப்பு வகை அமிலங்கள் குழந்தைகளின் அறிவுத்திறனைத் தூண்டுவதற்கு உதவி செய்கின்றன.
அதில் குறிப்பாக தாய்ப்பால் குடித்த 10 குழந்தைகளில் 9 குழந்தைகளின் உடலில் FADS2 என்ற அறிவுத்திறனுக்கான மரபணு தூண்டப்பட்டு இருந்தது. இந்த மரபணு குழந்தைகளை மகிழ்ச்சியாகவும், நலத்துடனும், துடிப்பாகவும் வைத்திருந்தன.
பியூஃபாஸ் (polyunsaturated fatty acids) எனப்படும் சிறப்பு வகை அமிலங்கள் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளன. மாட்டுப்பால், பெளடர் பால் ஆகியவற்றில் இவை கொஞ்சம்கூட இல்லை.
குழந்தைகளின் மூளைக்குள் நிகழும் தகவல் பரிமாற்றத்திற்கான நரம்புக் கற்றைகளை பியூஃபாஸ் அமிலங்கள் வலுப்படுத்துவதால் அறிவுத்திறன் அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
''தாய்ப்பால்தான் அறிவுத்திறன் வளர்ச்சிக்கு நல்லது என்ற கருத்துகளுக்கு எங்களின் கண்டுபிடிப்பு வலுசேர்த்துள்ளது. அதேநேரத்தில் அறிவுத்திறனுக்கு பரம்பரை ரீதியான மரபணுச் சேர்க்கையும் காரணம்'' என்று பேராசிரியர் டெர்ரி மொஃபிட் கூறினார்.
அறிவுவளர்ச்சியில் சத்துணவிற்கும் இயற்கைக்கும் உள்ள பங்கு பற்றிய விவாதங்கள் கடந்த நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டன. இயற்கையும் சத்துணவும் இணைந்து செயல்படுகிறது என்பதை எங்களின் கண்டுபிடிப்பு உறுதிசெய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அறிவுத்திறனுக்கும் தாய்ப்பாலுக்கும் இடையில் உள்ள தொடர்பு முதன்முதலில் கடந்த 1929-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
|