குழந்தைகளிடையே போட்டியும் சண்டையும் ஏற்படுவது இயல்பு. அதை நீங்கள் தீர்க்க முற்படும்போது ஏற்படும் பிரச்சினைகளோ ஏராளம்!
வயதில் சிறியவன் என்பதால் நீங்கள் ஒரு குழந்தையை ஆதரித்தால், அது மற்ற குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் செல்லப்பிள்ளையின் குணத்தையும் அது கெடுக்கும். மேலும் பிற்காலத்தில் உங்கள் குழந்தைகளிடையே பிளவு ஏற்பட இது காரணமாக அமையும்.
உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களையும், பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் மனப்பாங்கையும் உங்களால்தான் உருவாக்க முடியும். இதற்காக நீங்கள் சில வழி முறைகளை ஏற்படுத்தி செயல்படுவது நல்லது. இதோ உங்களுக்காக சில குறிப்புகள்.
நீங்கள் பாரபட்சமற்றவர் என்று உங்கள் குழந்தைகளுக்கு முதலில் உணர்த்த வேண்டும்.
சிறு சிறு சண்டைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். இவ்வாறு செய்வதால் அவர்கள் பிரச்சினைகi அவர்களே தீர்த்துக் கொள்ளும் பழக்கம் உருவாகும்.
அடிப்பது, உதைப்பது, கடிப்பது, போன்ற செயல்களையும், கெட்ட வார்த்தைகளால் திட்டுவதையும் அனுமதிக்காதீர்கள்.
எப்போதும் உங்கள் குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் அன்போடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். குழந்தைகள் குழந்தைகள்தான்!.
நீங்கள் குழந்தைகளோடு செலவழிக்கும் நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் தனி கவனம் செலுத்துங்கள்.
உங்கள் குழந்தைகள் சண்டை போடாமல் சேர்ந்து விளையாடும் போது அவர்களை பாராட்ட மறந்து விடாதீர்கள்.
உங்கள் குழந்தைகளிடையே அடிக்கடி எதற்காக சண்டை வருகிறது என்பதை கவனியுங்கள். உதாரணத்திற்கு டீ.வி. நிகழ்ச்சிகளை பார்ப்பதிலோ காரில் எங்கே உட்காருவது என்பதிலோ அடிக்கடி சண்டை ஏற்பட்டால், ஒரு முறை ஒரு குழந்தைக்கும், அடுத்த முறை அடுத்த குழந்தைக்கும் என்று முறை வைத்தால், சண்டையை தவிர்க்கலாம்.
குழந்தைகளுக்கிடையே புத்தகம், விளையாட்டுப் பொருள் போன்றவற்றை ஒருவர் மற்றவரிடமிருந்து வாங்கினால், அவற்றை நல்ல நிலையில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்.
உங்கள் கோபத்தையும் எரிச்சலையும் குழந்தைகளிடம் காட்டுவதைத் தவிர்க்கவும்.
நீங்களும், உங்கள் கணவரும், குழந்தைகள் சண்டையில் ஒரே முடிவை எடுக்கவேண்டும். உங்களுக்குள் இது பற்றி வேறுபாடு ஏற்பட்டால், குழந்தைகள் மனதில் குழப்பம் ஏற்படும். மேலும், குழந்தைகள் சண்டையை தீர்ப்பதற்கு பதிலாக உங்களுக்குள் சண்டை ஏற்பட வாய்ப்புண்டு!.
|