அஞ்சலி பகவத்தின் திறமையை அறிந்து சஞ்சய் சக்ரவர்த்தியின் கீழ் துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி அளிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு தேசிய அளவில் நடந்த போட்டியில் பட்டம் வென்று தனது முதல் அடியை எடுத்து வைத்தார். 2000ஆவது ஆண்டில் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 7வது இடத்தைப் பிடித்தார்.
இதற்காக, 2000ஆவது ஆண்டு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
துப்பாக்கிச் சுடுதலில் மிக வேகமாக முன்னேறினார் அஞ்சலி பகவத்.
அதன் முக்கிய பிரதிபலிப்பாக ஏதென்ஸ் ஒலிம்பிக்கிற்கு தேர்வான எட்டு இந்தியர்களில் அஞ்சலி பகவத்தும் ஒருவர். இந்த போட்டியின் மூலம் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்குத் தேர்வான இரண்டாவது இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்தார் அஞ்சலி.
அடுத்ததாக 2002 மான்செஸ்டர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று 4 தங்கப் பதக்கங்களை வென்று இந்தியாவின் வெற்றிக் கொடியை நிலைநாட்டினார். அதற்காக அவருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கி கெளரவித்தது மத்திய அரசு.
இதுமட்டுமல்லாமல் மஹாராஷ்டிரா பிரதிஷ்தா விருது, சத்ரபதி விருது, மகாராஷ்டிரா கெளரவ் விருதுகளும் அஞ்சலிக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டன.
மும்பையில் பிறந்து வளர்ந்த அஞ்சலியின் தந்தை காப்பீடு நிறுவனத்தின் ஊழியர், தாய் கர்நாடக இசைப் பாடகி. துப்பாக்கிச் சுடுதலை அஞ்சலி பகவத் தேர்வு செய்ததும் பெற்றோர் தரப்பில் இருந்து முழு ஆதரவு கிடைத்தது. மேலும் அஞ்சலியின் கணவர் மாண்டர் பகவத் ஒரு பொறியாளர். அவரது முழு ஒத்துழைப்புடன் அஞ்சலி தனது முக்கியமான பல தருணங்களை எதிர்கொண்டுள்ளார்.
ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு துறையில் கொஞ்சமும் அறிமுகம் இல்லாத அஞ்சலி பகவத் சாதித்துக் கொண்டிருக்கிறார். இதுபோல பெண்கள் நினைத்தால் எத்துறையிலும் தங்களது காலடியைப் பதிக்கலாம். வருங்காலம் உங்களைப் பற்றிய வரலாற்றைப் படிக்கச் செய்வோம்.
|