ஆரம்பப் பள்ளி முதல் மேல் நிலைப்பள்ளி வரை மாணவர்களை விட மாணவிகளே சிறந்த முறையில் படிக்கின்றனர்.
பொதுத் தேர்வுகளிலும் அதிக விழுக்காட்டில் தேறுகின்றனர்.
மதிப்பெண் பெறுவதிலும் முதலிடத்தில் உள்ளனர்.
இவை எல்லாம் மகிழ்ச்சி அடைய கூடியவைகள் தான்.
இந்த திறமைகள், புத்திசாலித்தனம் எங்கு சென்று அடைக்கலம் ஆகின்றன.
பெண்கள் ஏன் தொழில் வர்த்த நிறுவனங்களில் உயர் பதவிகளை எட்டிப்பிடிப்பதில்லை.
நாம் ஏற்றுக் கொண்டாலும், மறுத்தாலும் அத்தி பூத்தார் போல் 3.3 விழுக்காடு பெண்களே உயர் பதவிகளில் உள்ளனர்.
இது பெண்களை குறைத்து மதிப்பிடவோ அல்லது கற்பனையான தகவல் அல்ல.
அசோசெம் என்று அழைக்கப்படும், இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் மத்திய அமைப்பு நடத்திய ஆய்வில் இருந்து தெரிந்த தகவல்தான்.
இந்த அமைப்பு “ கல்வியில் உயர்நிலையில் உள்ள பெண்கள் ஏன் உயர் பதவிகளில் இல்லை” என்ற தலைப்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வு மொத்தம் 1053 பெண்களிடம் நடத்தப்பட்டது. அதில் 222 பேர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். 333 பேர் நகரங்களையும்,468 பேர் பெரு நகரங்கலையும் சேர்ந்தவர்கள்.
இந்த ஆய்வு முடிவுகளில் இருந்து பணிக்கு செல்லும் பெண்களில் 78.9 விழுக்காட்டினர், அவர்கள் ஓய்வு பெறும் வரை கீழ் நிலை பதவிகளிலேயே உள்ளனர் என தெரிய வந்துள்ளது.
இதற்கு காரணம் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் போதிய ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. குடும்ப பொறுப்புகளால் சிறந்த முறையில் பணியிடத்தில் பொறுப்புகளை நிறைவேற்ற முடிவதில்லை என்று ஆய்வில் பங்கேற்ற 73 விழுக்காடு பெண்கள் தெரிவித்தனர்.
அத்துடன் பெண்கள் நடுத்தர பதவிகளில் அல்லது உயர் பதவிகளில் இருந்தாலும், அவர்கள் கூறும் ஆலோசனை, புதிய முயற்சிகளுக்கு இயக்குநர், மேலாண்மை இயக்குநர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள் உரிய அனுமதி கொடுப்பதில்லை. இந்த ஆலோசனைகள், அதே பதவிகளில் உள்ள ஆண்கள் கொடுக்கும் ஆலோசனைகளை விட சிறந்ததாக இருந்தாலும் கூட, பெண்களின் முயற்சிகளுக்கு அனுமதி அளிப்பதில்லை.
நிறுவனங்களில் பெண்கள் சிறப்பாக பணியாற்றினாலும், அவர்கள் ஆண்களாக உள்ள உயர் அதிகாரிகளிடம் இருந்து குறைந்த அளவு அங்கீகாரமே பெறுகின்றனர். அத்துடன் பெண்களுக்கு பதவி உயர்வும் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என ஆய்வின் முடிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
|