நமது நாட்டின் எல்லைகளை இனி பெண்களும் பாதுகாக்கப் போகின்றனர்.
ஆம், நமது எல்லைப் பாதுகாப்புப் படையில் புதிதாக 750 பெண் காவலர்களை நியமிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மொத்தம் 2,10,261 வீரர்களின் வலிமையைக் கொண்ட எல்லைப் பாதுகாப்புப் படையில் படிப்படியாகப் பெண்களையும் இணைக்கும் வகையில் முதல்கட்டமாக 750 பெண்களை தேர்வு செய்து பணியமர்த்துவதற்கான ஆணைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று மாலை வழங்கியுள்ளது.
இதில் 650 பேர் பஞ்சாப்பிலும், மீதமுள்ளவர்கள் மேற்குவங்கத்திலும் பணியமர்த்தப்படுவர் என்று எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் ஏ.கே.மித்ரா இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"முதல் கட்டமாக பெண் காவலர்களை மட்டும் தேர்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. பெண் அதிகாரிகள் தேர்வு தற்போதைக்கு நடக்காது.
அதேநேரத்தில், எல்லைப் பாதுகாப்புப் படைக்குத் தேவையான சில பெண் அதிகாரிகளை வழங்குமாறு மத்திய ரிசர்வ் காவல்படையை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
புதிதாக தேர்வு செய்யப்படும் பெண் காவலர்கள், ஏற்கெனவே பணியில் உள்ள வீரர்களுக்கு உதவுவதுடன், அத்துமீறி எல்லை தாண்டும் பெண்களைக் கண்டறியும் நடவடிக்கையிலும் ஈடுபடுவார்கள்" என்றார் அவர்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் உயர்மட்ட அளவில் பெண் அதிகாரிகள் இருந்தாலும், காவலர் அளவில் பெண்கள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
|