பணியிடங்களில் இருந்தும், கல்வி நிலையங்களில் இருந்தும் வீடு திரும்பும்போதோ அல்லது வெளியில் செல்லும் போதோ பல்வேறு சூழ்நிலைகளில் பெண்கள் பல வகைகளில் துன்புறுத்தப்படுகின்றனர்.
இதற்கு பெண்களின் தைரியமும், துணிச்சலும், எச்சரிக்கை உணர்வும்தான் மாற்று மருந்தாக அமையும். அதுபோன்ற சம்பவங்கள் எல்லா பெண்களுக்கும் நேரும் என்று கூற இயலாது. ஆனால் அவ்வாறு நேரும்போது அதனை எதிர்க்கும் ஆற்றலை பெண் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் எங்களது கூற்று.
அதற்காகத்தான் இவைகளை கூறுகிறோம்.
பொதுவாக பெண்கள் மூன்று காரணங்களால் எளிதல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
குறைவான விழிப்புணர்வு:
பெண்கள் எங்கே இருக்கிறோம், நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் வைத்திருக்க வேண்டும். நம்மை மறந்த நிலையில் இருக்கும் சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும். நாம் புதிதாக போகும் இடத்தைப் பற்றிய தகவல்களை நாம் அறிந்திருக்க வேண்டும்.
உடல் மொழி:
தலையை குனிந்துகொண்டு, எதற்கும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். உடலையும், தலையையும் நேராக வைத்திருங்கள். மனித உடலில் புஜங்கள் தான் மிகவும் வலிமையானவை. எனவே, உங்களது கைகளும், புஜங்களும் தாக்குதலை தடுக்கவும், எதிர்தாக்குதலுக்கும் தயாராக இருக்கட்டும்.
தவறான இடத்தில், நேரத்தில் இருத்தல்:
குறிப்பாக இரவு நேரங்களில் குறுகிய பாதையில் தனியாக செல்வதை தவிருங்கள். உங்களுக்கு நம்பிக்கை குறைந்தவர்களுடன் கட்டாயத்தின் பேரில் செல்வதையும் தவிர்த்துவிடுங்கள். எந்த இடத்திற்கும் நேரம் காலம் என்று ஒன்று உண்டு. தாங்கள் சுதந்திரப் பறவை என்ற எண்ணத்தில் கண்ட நேரத்தில், கண்ட இடத்தில் இருந்து தாங்களாகவே வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம்.
காரில் கடைகள் உட்பட வெளியிடங்களுக்கு செல்லும் போதும், உண்ணும்போதும் திறந்த காரில் உட்கார்ந்துகொண்டிருக்கும் வழக்கம் பெண்களிடம் அதிகமாக உள்ளது. அப்போது மர்ம மனிதர்கள் காரில் ஏறி மிரட்டி உங்களை வேறு இடத்திற்கு அழைத்து சென்றுவிடலாம். எனவே, காரின் கதவுகளை நன்கு மூடி வைத்துக்கொள்ளுங்கள் அல்லது தனியாக அமர்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
பேருந்தில் செல்லும் பெண்களுக்கு நேரும் தொந்தரவுகள் கொஞ்சமல்ல. தனியாக செல்லும் பெண்களை இடையூறு செய்வதற்கு என்றே தனி கும்பல் உள்ளது. அதுபோன்ற நேரங்களில் பெண்களின் பார்வையே மிகப்பெரிய ஆயுதம். இதுபோன்ற சமயங்களின் போது முதலில் தனது கண்களை விரித்து, தனது எதிர்ப்பை தெரியப்படுத்துங்கள். பெரும்பாலும் அதிலேயே விரோதிகள் ஒதுங்கிக் கொள்வர். மேலும் தொடர்ந்தால் சில்மிஷம் செய்யும் ஆசாமிகளை முதலில் எச்சரியுங்கள். உங்கள் எச்சரிக்கை மணி அடுத்து விழப்போகும் அடியை எதிரொலிப்பதாக அமைய வேண்டும்.
முன்பு கூறியபடி, புஜங்களை பயன்படுத்தலாம். அதையும் மீறும் போது அருகில் இருப்பவர்கள், பேருந்து நடத்துனர், காவல்துறையினர் போன்றவர்களின் உதவியை நாடலாம்.
|