'வாயாடிகள்' என்ற பட்டத்திற்கு இனி பெண்கள் உரிமை கொண்டாட முடியாது. சில சூழ்நிலைகளின் அடிப்படையில் பெண்களைவிட ஆண்களே அதிகமாகப் பேசுகின்றனர் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
பேசும் விடயத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் தொடர்பான கண்டுபிடிப்புகள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் புதிய ஆய்வு நடத்தப்பட்டது.
நியூயார்க்கைச் சேர்ந்த கேம்ப்பெல் லீப்பர், மெலானி எய்ரெஸ் ஆகிய வல்லுநர்கள் இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்தனர்.
''சில சூழ்நிலைகளை கவனித்துப் பார்க்கும்போது, பெண்களைவிட ஆண்களே அதிகமாகப் பேசுகின்றனர். புள்ளிவிவரப்படி இதற்குத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன.
குறிப்பாக மனைவியுடமும், அண்டை வீட்டு நபர்களிடமும் ஆண்கள் அதிகமாகப் பேசுகின்றனர். பெண்கள் தங்கள் குழந்தைகளிடமும், கல்லூரித் தோழிகளிடமும்தான் அதிகமாகப் பேசுகின்றனர்.
அண்டை வீட்டு நபர்கள், தெரியாத நபர்களிடம் பேசுவதில்கூட ஆண்களுக்கும், பெண்களுக்கும் வித்தியாசம் உள்ளது.
கேட்பவருடன் தங்களுக்கு உள்ள உறவின் அடிப்படையில் பெண்கள் பேசுகின்றனர். ஆனால், பேசுபவர் தங்களை அதிகமாகக் கவனிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆண்கள் பேசுகின்றனர்.
குடும்பத்தினர், நண்பர்கள் என யாருடன் பேசினாலும் அதில் சிறிதளவாவது பால் வேறுபாடு உள்ளது தெரியவந்துள்ளது.
மொழியைப் பயன்படுத்துவதில் பெண்களின் மூளை மிகவும் கவனமான இருக்கிறது. ஆண்களின் மூளை ஆர்வமாக உள்ளது. இதனால் மூளையில் உள்ள பால் வேறுபாடு பேச்சின் தன்மையைத் தீர்மானிக்கிறது'' என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
|