நாம் விரும்பும் வாசனைகளைப் பற்றி பிரிட்டனில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் துணி துவைக்கும் சோப்புப் பொடியின் வாசனை நம் தாயை நினைவுபடுத்தும் வாசனைகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
சோப்புப் பொடி தங்களின் பழைய நினைவுகளை அதிகம் கிளறுவதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 5 இல் ஒருவர் கூறியுள்ளனர்.
லண்டனில் உள்ள கார்டிஃப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டிம் ஜேக்கப் தலைமையிலான குழுவினர் மனிதர்களை அதிகம் பாதித்துள்ள வாசனைகளைப் பற்றி ஆய்வு நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக கடந்த கால நினைவுகளுடன் அதிகம் தொடர்புடைய வாசனைகளைப் பற்றிக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில் பெரும்பாலானவர்கள் சோப்புப் பொடி தங்களின் குழந்தைப் பருவ நினைவுகளைத் தூண்டுகிறது என்று கூறியுள்ளனர். குறிப்பாக தங்கள் தாயை நினைவுபடுத்துகிறது என்றும், நண்பர்களுடன் ஏற்பட்ட சந்திப்புகளை நினைத்திருக்க உதவுகிறது என்றும் கூறியுள்ளனர்.
இதற்கடுத்த இடத்தை வாசனைத் திரவியங்கள் பிடித்துள்ளன.
இந்த ஆய்வு பற்றிபேராசிரியர் ஜேக்கப், கூறுகையில் ''வாசனைகள் நமது மூளைக்குள் உறங்கும் நினைவுகளைத் தூண்டுகின்றன. நீங்கள் மீண்டும் குழந்தைப் பருவத்திற்குச் செல்ல உதவுகின்றன'' என்றார்.
மேலும், ''நீங்கள் குழந்தையாக படுக்கையில் படுத்திருந்தபோது அருகில் உங்கள் தாய் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்திருப்பார். அவர் பயன்படுத்திய சோப்பு வாசனை உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும்.
அதே வாசனயை இப்போது மீண்டும் அனுபவிக்கும் போது, தாயிடம் கிடைத்த அன்பு, பாதுகாப்பு ஆகியவற்றை உங்கள் மூளை நினைவுபடுத்துகிறது'' என்றும் அவர் கூறியுள்ளார்.
தந்தையை நினைவூட்டும் பொருட்களில் புகையிலைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. முகச் சவரத்திற்குப் பிறகு பயன்படுத்தும் வாசனைத் திரவியம் தங்களின் தந்தையை நினைவுபடுத்துகிறது என்றும் பலர் கூறியுள்ளனர்.
புதிதாகத் தயாரிக்கப்பட்ட ரொட்டியின் வாசனை அனைவருக்கும் பிடித்துள்ளது. அதற்கடுத்த இடங்களில் மீன், வறுத்த பொருட்கள், தூய்மையான காற்று, கடல் தென்றல் ஆகியவை உள்ளன.
ஆய்வில் பங்கேற்றவர்களில் பலர், வாசனைகளை உணர்ந்தவுடன் அதற்குரிய பொருட்களை உடனடியாகச் சாப்பிட வேண்டும் அல்லது அனுபவிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
''புதிதாகத் தயாரிக்கப்பட்ட ரொட்டி நம் உடலுக்குத் தேவையான புரதத்தைத் தருகிறது. துண்டு போடப்பட்ட ரொட்டியிலிருந்து எழும் வாசனை மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எனவே ரொட்டியை அனைவரும் விரும்புகின்றனர்.
ஹார்மோன்கள், தற்காப்பு அமைப்பு, உணர்வுகள், நினைவுகள் ஆகியவற்றை வாசனைகள் அதிகமாகப் பாதிக்கின்றன என்பதே இறுதியாக நாங்கள் கண்ட முடிவு'' என்றுபேராசிரியர் ஜேக்கப் தெரிவித்தார்.
|