காலையில் எழுந்த கணம் முதல்... கணவனை எழுப்பி காஃபி கொடுப்பதில் ஆரம்பித்து, பிள்ளைகள் எழுப்பி, அவர்களைக் குளிப்பாட்டி பள்ளிகளுக்கு அனுப்பவும், இங்கும் அங்கும் ஓடியாடி மள மளவென சமையலை முடித்து, தானும் குளித்துத் தயாராகி குடும்பத்தோடு அமர்ந்து வேக வேகமாக சாப்பிட்டு முடித்துவிட்டு, மதிய உணவை கட்டிக்கொண்டு மொபட்டை கிளப்பிக் கொண்டு அலுவலகத்திற்குப் பறந்துச் சென்று, வேலையில் மூழ்கி புன்னகைத்த முகத்துடன் பணிகளை முடித்து, மாலையில் இல்லம் திரும்பியதும்...
தன் குடும்பத்தினரின் தேவைகளை முடித்து - தன்னைப் பற்றி சிந்திக்கவே நேரமில்லாமல் - படுக்கைக்குத் திரும்பும்போதும்... அந்த முகத்தில் காலையில் மலர்ந்த புன்னகை மட்டும் மாறுவதில்லை.
இதுதான் இன்றைய மங்கையின் அன்றாட நாட்குறிப்பு. ஒருபக்கம் அலுவலகமும் சமூகமும், மறுபக்கம் குடும்பம், குழந்தைகள், பண்டிகைகள். எல்லாவற்றையும் தனக்கே உரித்தான சாதுரியத்துடனும், தெளிவுடனும் செய்து முடிப்பவள். இன்றைய நவீன சமூகத்தில் அவளுக்குறிய இடம் இதுதான். அந்த காலத்துப் பெண்கள் போலல்ல இன்றையப் பெண்கள்.
காலத்தின் போக்கிலும், நாகரீகத்தின் ஏற்றத்திலும் மிகவும் மாறியவர்கள். இந்திய நாட்டின் முன்னேற்றப் பாதையே படித்துத் தகுதி பெற்ற பெண்கள்தான் என்று கூறுமளவிற்கு தகுதிபெற்றவர்கள். ஆண்களுக்கு நிகரான தகுதியிடனும், திறனுடனும் அவர்கள் உழைக்கின்றனர். அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு, கலை என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உயர்நிலைகளில் அவர்களும் உள்ளனர்.
இந்த நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது என்றால் - நான் கூறுவதை நிச்சயமாக நம்புங்கள் - அதில் பெண்களின் பங்கு சரிநிகர் சமமானதே.
21வது நூற்றாண்டு என்பதே கணினிப் புரட்சியின் அடிப்படையிலான தகவல் தொழில் நுட்ப யுகம்தான். இத்துறையில் பெண்கள் மிகப் பெரிய அளவிற்கு சாதித்துள்ளனர். இந்த யுகத்தில் வெளியில் சென்று பணியாற்ற வேண்டிய அவசியம் பெண்களுக்கு உள்ளது. வீட்டிலிருந்துகொண்டே குடும்பத் தேவைகளை கவனித்துக் கொண்டு பணிகளைச் செய்யவும் அவளால் முடியும். இதுமட்டுமல்ல, வெளியில் இருந்து தகவல்களைப் பெற்று வீட்டிலிருந்தபடியே வணிகத்தை செய்யும் ஆற்றலும் அவளிடம் உள்ளது.
பெண்கள் பலவீனமானவர்கள் என்று காலம் காலமாக கூறி வருகின்றனர். அதையே காரணமாக்கி எல்லாத் துறைகளிலிருந்தும் அவளை ஒதுக்கிவைத்தனர். இதனை கணினி யுகம் மாற்றிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அவள் நிலை உயர்ந்துள்ளது. ஒடுங்கிக்கிடந்த உள் உலகத்திலிருந்து அவள் வெளியுலகத்திற்கு வந்துள்ளாள்.
மற்றவர்களைப் போல என்னாலும் எதையும் செய்ய முடியும், சாதிக்க முடியும், அதற்கான மனோபலமும், ஆற்றலும் என்னிடம் உள்ளது என்று கூறும் அளவிற்கு அவள் நிலையும், மனமும் உயர்ந்துள்ளது. நவீன யுகத்தில் தன்னம்பிக்கையுடன் அவள் பணியாற்றி வருகிறாள்.
பெண்களே, ‘பலவீனமானவள் நான்’ என்று நீங்களே உங்களை நினைக்காதீர்கள். சமூகத்தில் நமக்கு உறுதியான இடம் கிடைத்துள்ளது. நம்மிடம் பலமும், திறனும் உள்ளது, எந்தத் துறையிலும் செயலாற்றும் திறன் நம்மிடம் உள்ளது. அதனை உறுதியாக உலகிற்கு எடுத்துரைப்போம்.
|